டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அதிரடி ஆபரேஷன்… உடைகிறது மதிமுக! உள்ளே வரும் தேமுதிக!

Published On:

| By Minnambalam

DMK MDMK

வைஃபை ஆன் செய்ததும், ”ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தைகள் என்ன” என்ற பாடல் எதிரொலிக்கு நடுவே மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். Stalin DMK MDMK DMDK

திமுக கூட்டணியில் இருந்தாலும் அவ்வப்போது திமுக தலைமையை சீண்டும் வகையில் ஏதாவது பேசுவது மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவின் வழக்கம்.

துரை வைகோவின் திருச்சி தொகுதிக்கு மத்திய அரசு ரூ.300 கோடி திட்டங்களை ஒதுக்கி தந்துவிட்டது என்று துரை வைகோவுக்கு நெருக்கமானவர்கள் பேசினர். ஏற்கனவே துரை வைகோ, மதிமுகவை பாஜக கூட்டணிக்கு இழுத்துச் செல்கிறார்; மத்திய அமைச்சராக முயற்சிக்கிறார் எனவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் வைகோவுக்கு மாநிலங்களவை எம்பி பதவி மீண்டும் வழங்காததால் திமுக மீது அதிருப்தியை காட்டிய துரை வைகோ, சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என பேசத் தொடங்கினார். இதனையடுத்து சிபிஎம் கட்சியும் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என பேசத் தொடங்கியது.

துரை வைகோவின் இத்தகைய பேச்சுகளையும் இதை கண்டும் காணாமல் இருக்கும் வைகோவின் போக்கும் திமுகவுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி வைத்தது.

இந்த நிலையில் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 23-ந் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார் மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ்.

இந்த விவரங்கள் அனைத்துமே முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மதிமுக பொதுக்குழுவில் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், தம்மை பரதனாகவும் வைகோவை ராமனாகவும் ஒப்பிட்டுப் பேசிய பேச்சைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின் ரொம்பவே கோபப்பட்டுவிட்டாராம். ‘நான் பரதன்.. அவர் (வைகோ) ராமனா? அவர் காட்டுக்கு போனதால்தான் நான் பட்டாபிஷேகம் சூட்டிக் கொண்டேனா’? என்ற கோபத்தையும் வெளிப்படுத்தினாராம்.

இந்த கோபத்தின் விளைவுதான் அதிரடி ஆபரேஷனைத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

பொதுவாக, கூட்டணி கட்சிகளில் இருந்து வருகிறவர்களை திமுகவில் சேர்ப்பது இல்லை என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் மதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேர்க்கும் படலம் இன்று முதல் அறிவாலயத்தில் அமர்க்களமாக தொடங்கிவிட்டது.

மதிமுகவின் வேட்பாளராக 2021-ம் ஆண்டு பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோர் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இன்று ஜூன் 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வந்த உடன், முதலில் மதிமுக நிர்வாகிகளைத்தான் உள்ளே அழைத்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்ததும் ரொம்பவே மகிழ்ச்சியுடன், “வெல்கம்! வெல்கம்!” என இரு கைகளையும் நீட்டி குதூகலமாக வரவேற்றாராம் முதல்வர் ஸ்டாலின். பின்னர் அனைவருக்கும் டீ, காபி, பிஸ்கட் கொடுத்து உபசரிக்கப்பட்டுள்ளது.

அப்போது முத்து ரத்தினம், ‘ மதிமுகவில் அதிருப்தியில் இருக்கிறவங்க எல்லாம் எப்ப சேர்க்கப்படுவாங்க’ என தயக்கத்துடன் கேள்வி கேட்க, ‘எல்லோரும் விரைவில் சேர்ந்துடுவாங்க. பெருசா விழா ஒன்று நடத்திடுவோம்.. நீங்க நல்லா வேலை செய்யுங்க.. உங்களுக்கு உரிய பொறுப்புகள் வந்து சேரும் என ரொம்பவே உற்சாகமாக சொல்லி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தை விட்டு வெளியே வந்த முத்துரத்தினத்தை மதிமுக நிர்வாகிகள் பலரும் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களிடம், முதல்வர் நல்ல மரியாதை கொடுத்தார்.. உற்சாகமாக பேசினார்.. நீங்க எல்லாம் தயாராக இருங்க.. ஒரு விழா வைச்சு சேர்ந்துடுலாம் என சொன்னதாக முத்துரத்தினம் பகிர்ந்து கொண்டார். அதேபோல மல்லை சத்யாவையும் மதிமுக அதிருப்தியாளர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

இது பற்றி நாம் திமுக வட்டாரங்களில் பேசிய போது, கடந்த 2 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில், பலவீனமாக இருக்கும் மதிமுகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுவது பற்றிய ஒரு பேச்சும் எழுந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின், அதெல்லாம் வேண்டாம்.. திமுக கூட்டணியில் சின்ன சேதாரம் கூட நம்மால் வந்துவிடக் கூடாது என கவனமாக எடுத்துச் சொன்னார்.

அதற்கு முன்னர், “மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட சிலர், மதிமுகவில் அதிருப்தியில் இருக்கின்றனர்.. அவர்களிடம் நாம் பேசலாமா” என திமுக சீனியர்கள் கேட்க, “மல்லை சத்யா திறமையானவர்தான். ஆனால் இப்ப கூட்டணியில் மதிமுக இருக்கிறது..அதனால் அவர்களை சேர்த்தால் நல்லா இருக்காது” என தவிர்த்து விட்டாராம் முதல்வர் ஸ்டாலின்.

அதேநேரத்தில்,துரை வைகோவின் பேச்சுகள்,
செயல்பாடுகள் குறித்து ரொம்பவே தலைவர் அதிருப்தியாகத்தான் இருந்தார்.. பொதுக்குழுவில் என்னதான் வைகோ தடுத்தார் என்றாலும் அதை எல்லாம் தலைவர் நம்புகிறவரும் இல்லை.. அதனால்தான் இந்த அதிரடி நடவடிக்கை என்கின்றனர்.

மதிமுகவின் அதிருப்தி வட்டாரங்களில் நாம் பேசிய போது, ஏற்கனவே ஏராளமான மதிமுக நிர்வாகிகள், திமுகவுக்கு செல்லும் முடிவில்தான் இருக்கின்றனர். ஆனால் இதுநாள் வரை திமுக தலைமை ஓகே சொல்லாமல் இருந்தது. திமுக தலைமை இப்போது சிக்னல் காட்டிவிட்டது.. அடுத்ததாக 10 மாவட்ட செயலாளர்கள், 100-க்கும் மேற்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் அடுத்தடுத்து திமுகவில் இணைவார்கள். மதிமுகவின் மூத்த தலைவர்களான மல்லை சத்யா, பூவிருந்தவல்லி டிஆர்ஆர் செங்குட்டுவன், பொடா செவந்தியப்பன், பொடா அழகு சுந்தரம், விருதுநகர் சண்முகசுந்தரம், திருச்சி வீரபாண்டியன் என மதிமுகவில் மிச்சம் மீதி இருக்கிற அத்தனை பேரும் திமுகவுக்கு இனி வரிசையாக அணிதிரண்டு வந்துவிடுவார்கள் என்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அதிரடி ஆபரேஷன், வைகோவையும் அவரது குடும்பத்தையும் ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். இதுபற்றி முதல்வர் ஸ்டாலினிடம் பேச வைகோ தரப்பில் ரொம்பவும் முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அது நடக்கவில்லையாம்.

மதிமுகவுக்கு கதவுகள் சாத்தப்படுவதால் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் தேமுதிக, திமுக கூட்டணிக்குள் நுழைய இருக்கிறது என்றும் அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு வைண்ட் அப் செய்தது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share