பிரதமர் நரேந்திர மோடி தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று (நவம்பர் 19) கோவை வருகிறார். இந்நிலையில் மத்திய அரசு மக்கள் தொகையை காரணம்காட்டி கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பதிவில், “‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
தமிழகம் போராடும் தமிழ்நாடு வெல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.
