கோவை வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தால் முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினர் போராட்டம் நடத்துவர் என அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கோவையில் இன்று இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்கிறார். கோவை வருகை தரும் மோடிக்கு எதிராக கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திக, மதிமுக, விசிக உள்ளிட்டவை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மோடிக்கு கறுப்பு கொடி காட்டுவது; மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு பலூன்களை பறக்கவிடுவது என எந்த ஒரு போராட்டத்துக்கும் தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது; அப்படி தமிழ்நாடு அரசு அனுமதித்தால் முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பாஜகவினரும் அதையே செய்வார்கள் என எச்சரித்துள்ளார்.
