ADVERTISEMENT

இந்தியா வந்த இலங்கை பிரதமர்… மோடிக்கு ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!

Published On:

| By Kavi

இலங்கை பிரதமர் இந்தியா வந்திருக்கும் நிலையில் கச்சத்தீவை மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (அக்டோபர் 16) இந்தியாவுக்கு வருகைத் தந்தார். அவரை நேரில் சந்தித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். விரைவில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய சந்திக்கவுள்ளார்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது, இந்தியா, இலங்கை இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 16) பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT

அதில், ‘ இலங்கை பிரதமரின் இந்தப் பயணம், பாக் விரிகுடாவின் பாரம்பரிய மீன்பிடி கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகளை தீர்க்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழக மீனவ சமூகங்கள் தொடர்ந்து துன்பங்களை எதிர்கொள்கின்றனர் . 2021 முதல், 106 வெவ்வேறு சம்பவங்களில் 1,482 மீனவர்களும் 198 மீன்பிடிப் படகுகளும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் துயரத்தையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT



இந்தப் பிரச்சினைகளைத் தூதரக நடவடிக்கைகள் மூலம் தீர்க்க இந்திய அரசின் தலையீட்டை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரி வருகிறது. இதற்காக, தான் பதினொரு முறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு 72 முறை கடிதம் எழுதியுள்ளேன்.

இந்தச் சிறைப்பிடிப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த கீழ்கண்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து இலங்கைப் பிரதமரின் வருகையின் போது விவாதிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இந்தத் தீவு ஒன்றிய அரசால் மாநில அரசின் முறையான ஒப்புதலைப் பெறாமல் இலங்கைக்கு மாற்றப்பட்டது – இந்த முடிவை 1974 முதல் தமிழ்நாடு சட்டமன்றம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நமது மீனவர்கள் இப்போது தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், அத்துமீறி நுழைவதாகக் கூறி அடிக்கடி துன்புறுத்தப்படுகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கச்சத்தீவை மீட்பதற்கும், பாக் விரிகுடா பகுதியில் உள்ள நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்திட இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மீனவ சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் துயரமான பிரச்சினைகளைத் தீர்க்க இது மிகவும் முக்கியமானது.

தற்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 76 மீனவர்களும் 242 மீன்பிடி படகுகளும் இலங்கை வசம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் துயரத்தைத் தணிக்க, அவர்களை விரைவாகத் தாயகம் திரும்பவும், அவர்களின் படகுகளை இலங்கை அரசிடமிருந்து விடுவிக்கவும் உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்

இலங்கை மீன்பிடிச் சட்டத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தம், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை தேசியமயமாக்க வழிவகுத்துள்ளால் அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமற்றதாகிவிட்டது. இது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடுமையான நிதி நெருக்கடியையும் வாழ்வாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தப் பிரச்சினையை இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நிறுவப்பட்ட மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழு, சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து கூட்டப்படுவதில்லை. எனவே, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களின் கவலைகளை, நிலையான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் நிவர்த்தி செய்வதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட தளத்தை உருவாக்க இந்த வழிமுறையை மீண்டும் புதுப்பிப்பது அவசியமாகும்.

இந்தப் பிரச்சினைகளினால் ஏற்படும் மனித மற்றும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான தூதரக நடவடிக்கைகள் மூலம் விரைவான மற்றும் நீடித்தத் தீர்வை அடையும் நோக்கில், இவற்றை இலங்கை பிரதமரிடம் எடுத்துச் சென்று விவாதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share