இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால சிறப்புத் தொகை வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்த மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.3000 + கோடைக் கால சிறப்பு நிதியாக ரூ.2000 என 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் தலா 5000 ரூபாயை வரவு வைத்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலை மனதில் வைத்துதான் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தசூழலில் இன்று (பிப்ரவரி 19) நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “2026 தேர்தல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைக்காலத்துக்கு ரூ.2000 கொடுத்துள்ளீர்கள். மகளிர் உரிமைத் தொகையை யாரும் எதிர்க்கமாட்டார்கள். பிறகு முன்கூட்டியே ஏன் கொடுத்தீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, ‘கோடைக்காலம் வருகிறது. மருத்துவ உதவிக்கு தேவைப்படும் என்பதால் வழங்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து பேசிய மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், “கலைஞர் டிவி கொடுத்தபோது அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. பாஜகவை சேர்ந்த ஒருவர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். சூழ்ச்சியை முறியடித்துள்ளோம். இனி ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் சிறப்புத் தொகை வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
