தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் களைகட்டி உள்ளது.
அதிமுக தலைமையிலான பாஜக என்டிஏ கூட்டணியில் பாமக, தமிழ் மாநிலகாங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 19) முதல்வர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோர் சந்தித்து திமுக – தேமுதிககூட்டணியை உறுதி செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தனது எக்ஸ் பதிவில், “தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசி மூச்சு வரை தமிழ் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்தவர். ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய இயக்கம் தீயசக்தியோடு கூட்டணி வைத்திருக்கிறது” என விஜயகாந்த் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளது.
