குளிக்கும் தண்ணீர், சருமத்தின் நிறத்தை மாற்றும் என்கிற நம்பிக்கை பலருக்குண்டு. நிஜத்தில் “குளிக்கும் தண்ணீருக்கும், இயற்கையான சரும நிறத்துக்கும் சம்பந்தமேயில்லை” என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.
“ஆனால், ரசாயனம் கலந்த தண்ணீர், சுத்தம் இல்லாத தண்ணீர், நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் தேங்கி இருந்த தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்தினால் அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்பட்டு சருமத்தின் தன்மை மாற வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.
மேலும், “உள்ளாடைகள் அணிவதால் மார்பகத்துக்கு கீழ் அலர்ஜி, தொடை இடுக்குகளில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் வரும். அந்தப் பகுதி கருமை படிந்தும் காணப்படும்.
பெண்கள் பலர் கோடைக்காலத்தில் இந்தப் பிரச்சினைக்கு உள்ளாவார்கள். இதை ‘ஸ்வெட் டெர்மடைட்டிஸ்’ (Sweat Dermatitis) என்பார்கள்.
உள்ளாடைக்கும், மார்பகத்துக்கும் இடையே வியர்வை அதிகப்படியாக படிவது இதற்கு முக்கியமான காரணம்.
இப்படி வியர்வை படிவதைக் கட்டுப்படுத்த மார்பகத்துக்கும் உள்ளாடைக்கும் இடையே மெல்லிய காட்டன் துணியை வைத்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்போதெல்லாம், மெலிதான துணியை வைத்து அந்த இடத்தை லேசாகத் துடைத்து எடுக்கலாம்.
கேலமைன் மற்றும் கற்றாழை இணைந்து தயாரிக்கப்பட்ட பாடி லோஷன்களை பயன்படுத்தினால் தீர்வு கிடைக்கும். சருமத்தின் நிறமும் மாறாது” என்கிறார்கள்.
“இந்திய வெப்பநிலைக்கு கோடைக்காலத்தில் சருமத்தின் நிறம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. தரமான சன்ஸ்கிரீன் பயன்படுத்தும்போது, சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை தாக்குவது ஓரளவு கட்டுப்படுத்தப்படும். இதனால் சருமத்தின் நிறம் மாறுவதும் தவிர்க்கப்படும்.
சூரியனிடமிருந்து மட்டுமல்ல; லேப்டாப் போன்ற சாதனங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களிடமிருந்தும் சன்ஸ்கிரீன் சருமத்தைப் பாதுகாக்கும். சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை வாங்கிப் பயன்படுத்துவது முக்கியமானது.
சருமப் பராமரிப்பில், என்னதான் கண்டிஷனர், க்ரீம் என்று வெளிப்பூச்சுகளைப் பயன்படுத்தினாலும், உள்ளிருந்தே அதன் பொலிவு மிளிர உணவுகளே அடிப்படை.
சரும நிறத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு தீர்வு சொல்லப்பட்டாலும், ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வதே முதன்மை தீர்வாக இருக்கும்’’ என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
ஆளுநர் ஆத்தும் டீ: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ரவுடி கருக்கா வினோத்தை ஏவி விட்ட பாஜக? ஆளுநருக்கு அதிகரிக்கும் நெருக்கடி!
