சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர்.
அப்போது அவர் போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து கை, காலில் கட்டுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது.

மாவுக்கட்டு நாடகம் என விமர்சனம்!
பொதுவாக குற்றச்சம்பவங்களில் கைதாகும் நபர்கள் போலீசார் பாணியில் விசாரிக்கப்பட்டு கை, காலில் மாவு கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர். அதுகுறித்து நீதிபதிகளும், செய்தியாளர்களும் கேட்கும் போது, கழிவறையில் வழுக்கி விழுந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுவதுண்டு.
அதே போல அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை கைதான ஞான சேகரனும் மாவுக்கட்டில் இருந்த புகைப்படம் வெளியானது. எனினும் அவர் திமுக ஆதரவாளர் என தகவல் வெளியான நிலையில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே இந்த மாவுக்கட்டு நாடகம் என சமூகவலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இதற்கிடையே நீதிமன்ற காவலில் உள்ள ஞானசேகரன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலில் ராடு பொருத்தம்!
இந்த நிலையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுக்கட்டுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள ஞானசேகரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது காலில் ராடு வைக்கப்பட்டுள்ளது.
’ஞானசேகரனுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை மாவுக்கட்டு மூலம் சரி செய்ய முடியாத நிலையில், அவருக்கு காலில் ராடு பொருத்தி முறிந்த எலும்பை இணைக்க அறுவை சிகிச்சை செய்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் 4,5 கைதிகள் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஞானசேகரன் ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்கும் பட்சத்தில், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் புழல் சிறைக்கு மாற்றப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
ஈரோடு கிழக்கு… திமுகவுக்குள் பேசப்படும் குறிஞ்சி சிவகுமார்
கம்யூனிச தலைவர்களை சீண்டிய ஆ.ராசா… கண்டனம் தெரிவித்த பெ.சண்முகம்