2026 சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தோற்கடித்து 1,01,757 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்று அமைச்சர் ஆனார்.
தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்கில் சிக்சியதால் அமைச்சர் பதவி பறிபோனது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வெளியே வந்த அவர், கரூர் தொகுதியிலும், கோவையிலும் தீவிரமாக பணியாற்றினார்.
இந்தநிலையில் அவர் கோவை தெற்கில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி கோவையில் இந்த முறை களம் காண்கிறார் என்பதை கடந்த 2025 செப்டம்பர் 18ஆம் தேதியே நமது மின்னம்பலத்தில் சொல்லியிருந்தோம்.
அதிமுக பாஜகவுக்கு ஷாக்- செந்தில் பாலாஜியின் ‘கொங்கு + குடும்ப வியூகம்’- கரூரில் சிக்னல் தந்த ஸ்டாலின்? என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில், ”கரூரில் இந்த முறை நிற்காமல் கொங்கு பெல்ட்டில் ஒரு தொகுதியில் நானே போட்டியிடுகிறேன்.. அப்படி போட்டியிட்டால் அதிமுக-பாஜகவை ‘மிரட்டிவிட’ முடியும்.. எனக்கு பதிலா கரூரில் ஒரு ‘நல்ல கேன்டிடேண்ட்டை’ போட்டுவிடலாம்” என்று கரூர் முப்பெரும் விழாவுக்கு வந்த ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி கேட்டிருந்தார். அதனால் கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம்” என்று கூறியிருந்தோம்.
அதன்படியே கோவை தெற்கில் களமிறங்குறார் செந்தில் பாலாஜி.
அதிமுக சார்பில் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் கோவை தெற்கில் போட்டியிடுகிறார்.
செந்தில் பாலாஜி கடந்த முறை போட்டியிட்ட கரூர் தொகுதியில் ஆசி.எம்.தியாகராஜன் போட்டியிடுகிறார்.
