நடிகரும், தவெக தலைவருமான விஜய் அக்கட்சியின் மேடையில் நடனமாடியதை தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் விமர்சித்திருந்த நிலையில் நயினார் நாகேந்திரன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் சலங்கை கட்டி ஆடவில்லையா என்று செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நேற்று முன்தினம் பனையூரில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பாடகர் வேல்முருகன், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை வாழ்த்தி பாடினார். அப்போது நடிகர் விஜய் உற்சாகமாக மேடை ஏறி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது குறித்து விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன், “விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன். அக்கட்சியின் விழாவில் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒரு கட்சித் தலைவர் தமிழகத்தின் கலாச்சாரம் தெரியாமல் மேடையில் நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படி ஆடிக்கொண்டிருந்தால் கடைசிவரை நடனமாடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 4) ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தவெ நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், “நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளேன்” என்றார்.
மேலும் விஜய் நடனமாடியது குறித்த கேள்விக்கு “முருகன் பக்திப் பாடலைப் பாடிய வேல்முருகன், விஜயை ஆடச் சொன்னதால் அவர் நடனமாடினார். அதை விமர்சனம் செய்திருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன், எஸ்.பி. வேலுமணி சலங்கை கட்டி ஆடவில்லையா என்று பதிலடி கொடுக்கும் வகையில் கேள்வி எழுப்பி உள்ளார்.
