இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி 2025 டிசம்பர் 17 அன்று நடைபெற்ற தனது வாரியக் கூட்டத்தில் பரஸ்பர நிதிகளின் (Mutual Funds) செலவு விகித கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, பரஸ்பர நிதிகளின் அடிப்படைச் செலவு விகிதத்தில் (Base Expense Ratio) இனி சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை வரிகள் சேர்க்கப்படாது. அதாவது, பங்கு பரிவர்த்தனை வரி, ஜிஎஸ்டி, முத்திரை வரி (Stamp Duty), செபி கட்டணங்கள் மற்றும் பங்குச் சந்தை கட்டணங்கள் போன்ற வரிகள் அடிப்படைச் செலவில் இருந்து நீக்கப்படும்.
மாறாக, நிதி மேலாண்மை கட்டணம், விநியோகஸ்தர் கட்டணம் மற்றும் பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர் (RTA) கட்டணங்கள் போன்ற நிதியை நிர்வகிப்பதற்கான நேரடிச் செலவுகள் மட்டுமே அடிப்படைச் செலவில் அடங்கும். இதன் விளைவாக மொத்தச் செலவு விகிதம் என்பது அடிப்படைச் செலவு விகிதம், தரகு (Brokerage) மற்றும் ஒழுங்குமுறை மற்றும் சட்டப்பூர்வ வரிகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் முதலீட்டாளர்கள் நிதியை நிர்வகிப்பதற்கான உண்மையான செலவையும், வரிகள் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்களையும் தெளிவாகப் பிரித்துப் புரிந்துகொள்ள உதவும். இதனால், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். செபி கொண்டு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, பல்வேறு பரஸ்பர நிதி வகைகளுக்கான திருத்தப்பட்ட அடிப்படைச் செலவு விகித வரம்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
குறியீட்டு நிதிகள் (Index Funds) மற்றும் பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) பொறுத்தவரை, தற்போதைய 1.00% என்ற வரம்பு, 0.90% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Fund of Fund நிதிகளில் முதலீடு செய்பவர்களுக்கு Liquid Funds, குறியீட்டு நிதிகள் அல்லது இடிஎஃப்களில் (ETFs) முதலீடு செய்யும் போது, தற்போதைய 1.00% என்ற வரம்பு 0.90% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 65%க்கும் அதிகமாக ஈக்விட்டி திட்டங்களில் (Equity Schemes) முதலீடு செய்யும் ஃபண்டுகளுக்கு தற்போதைய 2.25% என்ற வரம்பு 2.10% ஆகவும், மற்ற ஃபண்டுகளுக்கு 2.00% என்ற வரம்பு 1.85% ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.
திறந்தநிலை ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி அல்லாத திட்டங்களுக்கு, சொத்து மேலாண்மை அளவைப் (AUM) பொறுத்து செலவு விகித வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, ரூ. 500 கோடிக்கும் குறைவான சொத்துக்களைக் கொண்ட ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்கு, தற்போதைய 2.25% என்ற வரம்பு 2.10% ஆகவும், ஈக்விட்டி அல்லாத திட்டங்களுக்கு 2.00% என்ற வரம்பு 1.85% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
சொத்து மதிப்பு அதிகரிக்கும் போது, இந்த செலவு விகித வரம்புகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ரூ. 50,000 கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்ட ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்கு, தற்போதைய 1.05% என்ற வரம்பு 0.95% ஆகவும், ஈக்விட்டி அல்லாத திட்டங்களுக்கு 0.80% என்ற வரம்பு 0.70% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மூடியநிலை திட்டங்களுக்கும் (Close-ended schemes) இந்த திருத்தங்கள் பொருந்தும். ஈக்விட்டி சார்ந்த மூடியநிலை திட்டங்களுக்கு தற்போதைய 1.25% என்ற வரம்பு 1.00% ஆகவும், ஈக்விட்டி அல்லாத திட்டங்களுக்கு 1.00% என்ற வரம்பு 0.80% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
