இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மின்னணு தளங்கள் அல்லது இணையதளங்கள் மூலம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பொதுப் பங்கு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது குறித்து SEBI முதலீட்டாளர்களை எச்சரித்தது. இத்தகைய தளங்கள் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்பதோடு, ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டவையும் அல்ல என்று SEBI தெரிவித்துள்ளது.
பட்டியலிடப்படாத பொதுப் பங்கு நிறுவனங்கள்:
பட்டியலிடப்படாத பொதுப் பங்கு நிறுவனங்களின் பத்திரங்கள் தொடர்பான பரிவர்த்தனைகளைச் சில இணையதளத் தளங்கள் எளிதாக்குவதாகவும், இதனால் முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்துகள் ஏற்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக SEBI தெரிவித்துள்ளது. 2024 டிசம்பர் மற்றும் 2026 ஆகஸ்ட் மாதம் விடுக்கப்பட்ட முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள SEBI, இத்தகைய தளங்களில் பரிவர்த்தனை செய்வதோ அல்லது முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதோ பாதுகாப்பானது அல்ல என்று கூறியுள்ளது.
செபியால் அங்கீகாரம் பெறவில்லை:
ஆன்லைன் வர்த்தகத் தளங்கள், ஃபேண்டஸி கேம்கள் (fantasy games) மற்றும் பட்டியலிடப்படாத கடன் பத்திரங்கள் தொடர்பான தளங்கள் குறித்தும் தாங்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. இத்தகைய மின்னணு தளங்கள் செபி-யால் அங்கீகரிக்கப்படவோ அல்லது அங்கீகாரம் பெறவோ இல்லை என்பதால், அவற்றில் பரிவர்த்தனை அல்லது வர்த்தகம் செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம் என்று முதலீட்டாளர்கள் மீண்டும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
