சனாதன தர்மம்.. உதயநிதி ஸ்டாலினை சீண்டிய ஆளுநர் ரவி

Published On:

| By Mathi

RN Ravi

“சனாதன தர்மத்தை (Sanatana Dharma) ‘டெங்கு, மலேரியா’ போன்றவற்றுடன் ஒப்பிட்டு விமர்சித்தவர்கள்கூட தற்போது அமைதியாகிவிட்டனர்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மறைமுக விமர்சித்தார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மயிலாடுதுறையில் நடைபெற்ற தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் 60-வது மணிவிழாவில் பங்கேற்றார்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது உரையில் சனாதன தர்மத்தின் பெருமைகளையும், அதன் அழியாத தன்மையையும் வலியுறுத்தினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், சனாதன தர்மம் 5,000 ஆண்டுகள் பழமையானதும், நித்தியமானதுமான ஒரு நாகரிகம் என்று குறிப்பிட்டார். சனாதனம் என்பது மரத்தின் வேர் போன்றது என்றும், அது இல்லாமல் மரம் வளர முடியாதது போல, சனாதன தர்மம்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். சனாதன தர்மத்தை ‘டெங்கு, மலேரியா’ போன்றவற்றுடன் ஒப்பிட்டு விமர்சித்தவர்கள்கூட தற்போது அமைதியாகிவிட்டனர் என்று மறைமுகமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்த ஆளுநர், விமர்சிப்பவர்களையும் சனாதனம் விலக்காது, அவர்கள் அனைவரையும் நம்முடையவர்களாகவே கருதுகிறது என்றார்.

ADVERTISEMENT

மேலும், இந்தியா என்பது பாரத் என்றுதான் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், சனாதன தர்மம் உருவாவதற்கு தமிழ்நாடுதான் காரணம் என்றும் அவர் மீண்டும் தனது வாதங்களை முன்வைத்தார். பிரிட்டிஷ் ஆட்சி போன்ற கடினமான காலங்களிலும்கூட ஆதீனங்கள் சமுதாயத்திற்கும், நாட்டிற்கும், சனாதன தர்மத்திற்கும் தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாகவும் ஆளுநர் பாராட்டினார். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு ‘விஸ்வகுரு’வாகவும், ‘விஸ்வ வித்யா’வாகவும் உயரும் என்றும், அதில் ஆன்மிகத் தலைவர்களின் வழிகாட்டுதல் மிக முக்கியம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், தருமபுரம் ஆதீனத்தின் ஆன்மிக மற்றும் கல்வி சார்ந்த பணிகளைப் பாராட்டிய ஆளுநர் ரவி, ஆதீனங்கள் நாட்டின் 5,000 ஆண்டுகால சனாதன தர்மத்தை பாதுகாப்பதிலும் நிலைநிறுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிட்டார். மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதீனம் சார்பில் நலத்திட்ட உதவிகளையும், ஆதீனம் வெளியிட்ட நூல்களின் மொழிபெயர்ப்புப் பிரதிகளையும் ஆளுநர் வழங்கினார்.

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடியை ‘தமிழ் மொழியின் சிறந்த காதலர்’ என்று புகழ்ந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 11 ஆண்டுகளில் அவர் தமிழ் மொழியை பரவலாக ஊக்குவித்திருப்பதாகவும், இது தமிழ் மொழியை சேவை செய்வதாகக் கூறும் மற்றவர்களை விட அதிகம் என்றும் கூறினார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோலை பிரதமர் மோடி நிறுவியதை அவர் நினைவுகூர்ந்தார்.

இதற்கு முன்னதாக, திருவள்ளுவர் மற்றும் அய்யா வைகுண்டர் ஆகியோரை சனாதன தர்மத்துடன் தொடர்புபடுத்தி ஆளுநர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் என்று ஆளுநர் கூறியதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மார்ச் 2024-ல் அய்யா வைகுண்டரின் வரலாற்றை ஆளுநர் திரிப்பதாக பாலபிரஜாபதி அடிகளார் விமர்சித்திருந்தார்.

ஆளுநரின் சனாதன தர்மத்தை வலியுறுத்திப் பேசும் போக்கு, அவரது பதவியின் எல்லைகளை மீறுவதாகவும், திராவிட மற்றும் சமூக நீதி சித்தாந்தங்களுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகிறது. ஆளுநரின் பதவி சனாதனத்தின் தூது சொல்வதற்கான மேடை அல்ல என்றும், அம்பேத்கரைப் பாராட்டிவிட்டு சனாதனத்திற்கு ஆதரவாகப் பேசுவது இரட்டை வேடம் என்றும் அமைச்சர் கோவி. செழியன் போன்றோர் விமர்சித்தனர்.

கடந்த 2023 செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை சனாதன ஒழிப்பு மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து ஆற்றிய உரை, தேசிய அளவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பியது. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதை “ஒழிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது, இந்தியா முழுவதும் விவாதங்களையும் கண்டனங்களையும் தூண்டி, ஒரு பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share