ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அரசாணை வெளியீடு!

Published On:

| By Monisha

salary rise to contract teachers

ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று (மார்ச் 16) அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படும் வரை ஒப்பந்த முறையில் ஊதியம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 ஊதியமாக கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டு வந்தது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.12,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000, முதுநிலை ஆசிரியர்களுக்கு ரூ.18,000-மாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்ததன் அடிப்படையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலப்பிரிவு துறையின் கீழ் இயங்கும்,

தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய 221 ஆசிரியர்களுக்கும் புதிதாக நிரப்பப்பட இருக்கும் 194 பணியிடங்களுக்கு சேர்த்து மொத்தமாக 415 தற்காலிக ஆசிரியர்களுக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என பழங்குடியின நலப்பிரிவு இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட இருப்பதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலவாரியம் தெரிவித்திருந்தது.

மோனிஷா

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

மகப்பேறு விடுமுறையில் சென்ற பெண்ணை நீக்கிய மெட்டா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share