ஹரீஷ் காரே
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஜூன் 25 அன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, நேரு-காந்தி குடும்பத்தின் முதன்மைச் சீடரான நட்வர் சிங், லண்டனில் இந்தியாவின் துணைத் தூதராக இருந்தார். RSS Uprising A consequence of the Emergency
அவசர நிலையைப் பிறப்பிக்க இந்திரா காந்தி எடுத்த முடிவு அவரையும் (பல தாராளவாத ஆளுமைகளையும்) குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் பிரதமரின் அலுவலகத்தில் தகவல் ஆலோசகராக இருந்த எச்.ஒய். சாரதா பிரசாத்திடம் இதுபற்றிக் கேள்விகளை எழுப்பினார். பிரிட்டனில் இந்தியாவின் விமர்சகர்களைத் திறம்படக் கையாள முடிந்தாலும், இந்தியா ஒரு மென்மையான சர்வாதிகாரத்தை நோக்கித் திரும்பியதை ஜவஹர்லால் நேருவின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் அபிமானம் கொண்டவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை என்று நட்வர் சிங் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ஜூன் 25 அன்று நடந்த உச்சக்கட்ட நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்ற வளர்ச்சிகளை சாரதா பிரசாத் அருகில் இருந்து பார்த்திருப்பார். நட்வர் சிங்குக்குப் பதிலளிக்கக் கிட்டத்தட்ட ஒரு மாதம் எடுத்துக்கொண்ட அவர், ஜூலை 20 அன்று பதிலளித்தார். ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசாங்கத்திற்கு எதிராகத் தொடுத்த போர் எல்லை மீறிவிட்டது. அவர் தெரிந்தோ தெரியாமலோ, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நானாஜி தேஷ்முக்கிற்கு அரசுக்கு எதிரான “இயக்கத்தின்” தளபதியாகப் பொறுப்பேற்க அனுமதித்தார் என்று சாரதா பிரசாத் எழுதினார்.
சாரதா பிரசாத், நட்வர் சிங்குக்கு எழுதிய தனது கடிதத்தை ஆழ்ந்த பார்வையுடன் முடித்தார்”… நமது அரசியல் கட்டமைப்பைக் காப்பாற்ற முழு நடவடிக்கையும் அவசியமாக இருந்தது. நமது அரசியல் கட்டமைப்பு அல்லது நோக்கங்களைப் பற்றி நாம் பேசும்போது, இடதுசாரிகள் சோஷலிசத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆங்கிலோ – அமெரிக்க – ஐரோப்பிய தாராளவாதிகள் பன்மைத்துவ ஜனநாயகத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள், எந்தக் குழுவும் மதச்சார்பின்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மதச்சார்பின்மை இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம். ஜே.பி.யும் அவரது குழுவும் செய்த மிகப்பெரிய தவறு, கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் ஒப்படைத்ததுதான். ஆர்.எஸ்.எஸ். தலைமையில் ஒரு எதிர்க்கட்சி மத சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒரு அமைப்பைப் பாதுகாக்கும் என்று அறிவுள்ள ஒருவரால் ஒருபோதும் சொல்ல முடியாது.”

எவ்வளவு தீர்க்கதரிசனம்! ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தை அனுபவிக்கிறார். விக்யான் பவனில் தனது சொற்பொழிவுகளை ஆற்ற அவருக்கு அனுமதி உண்டு. நாட்டின் இரண்டாவது சக்திவாய்ந்த நபராக அவர் போற்றப்படுகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜே.பி. மகாத்மாவை நோக்கி நாதுராம் கோட்சே குண்டுகளைச் சுடுவதற்கான சூழலை உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்., நமது தேசியக் கற்பனையில் ஒரு “மதிப்புமிக்க” இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் மரியாதை மட்டுமல்ல, நமது தேசிய விவகாரங்களில் இப்போது அதற்கு செல்வாக்கு, ஆதரவு, முடிவெடுக்கும் அதிகாரம் ஆகியவை உள்ளன.
அவசரநிலைக் காலத்தைப் பற்றி 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்யும் எந்த வரலாற்றாசிரியரும் கேட்க வேண்டிய கேள்வி இது: ஐரோப்பாவின் அறிவுசார் அரங்குகளிலும் அரசியல் களங்களிலும் மோதிக்கொண்டிருந்த உலகளாவிய சக்திகளையும் கருத்துகளையும் பற்றி நன்கு அறிந்து, புரிந்துகொண்ட ஜே.பி. போன்ற ஒரு மனிதர், தனது ‘முழுமையான புரட்சி’ பின்னாளில் எப்படிச் சிதையும் என்பதை ஏன் முன்னறியத் தவறினார்? அவரிடம் சொந்தமாக எந்தப் படையும் இல்லை; பட்னாவிலும் அகமதாபாத்திலும் தெருவில் இறங்கிப் போராடிய பல்வேறு பிரிவுகளின் கலவையான கூட்டத்தை அவர் புரட்சியின் முன்னணிப் படையாகத் தவறாகக் கருதினார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களில் ஒழுங்கமைக்கப்பட்ட தொண்டர்களைக் கொண்ட ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.தான். எனவே அது தவிர்க்க முடியாமல், “இயக்கத்தின்” செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றது.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் வெளிநாட்டு வரலாற்றைப் புறக்கணித்தது மட்டுமல்லாமல், இந்திய யதார்த்தங்கள், ஆர்.எஸ்.எஸ்.ஸின் இயல்பு ஆகியவை பற்றிய தனது சொந்தப் புரிதலையும் மறந்துவிட்டார். “முழுமையான புரட்சிக்கான எங்கள் இயக்கத்தில் இணைய அனுமதிப்பதன் மூலம் அவர்களை மதச்சார்பற்றவர்களாக மாற்ற முயன்றேன். மதச்சார்பின்மை என்று அழைக்கப்படும் இந்த இலட்சியத்திற்கு எங்கள் இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது என்பதைப் பக்கச்சார்பற்ற எந்தப் பார்வையாளரும் ஒப்புக்கொள்வார்கள். ஜனசங்கத்தையும் ஆர்.எஸ்.எஸ்.ஸையும் முழுமையான புரட்சியின் மதச்சார்பற்ற வரம்பிற்குள் கொண்டுவருவதன் மூலம் மதச்சார்பின்மையின் அடித்தளத்தை பலப்படுத்த முயற்சித்தேன்,” என்று அவர் வலியுறுத்தினார். நாக்பூரில் உள்ள புத்திசாலிகள் அந்தத் துறவியின் அப்பாவித்தனத்தை எண்ணிச் சிரித்திருப்பார்கள். இன்றுவரை சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்திரா காந்தியும் அவரது அவசரநிலையும் 1977 மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களால் அகற்றப்பட்டாலும், ஜனதா கட்சியினர் ஆர்.எஸ்.எஸ்.மீது மென்மையான போக்கைக் கொண்டிருந்தனர். மது லிமாயே போன்ற ஒரு கடுமையான விமர்சகர், “திருமதி இந்திரா காந்தியின் சிறைச்சாலையின் கூரையின் கீழ் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் ஜே.பி. இயக்கத்தின் மற்ற ஆதரவாளர்களும் ஒன்றிணைந்தது ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சிறந்த புரிதலை மேம்படுத்தியது” என்று கருதினார்.
ஆனால் லிமாயேவும் மற்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட ஜே.பி. ஆதரவு அமைப்புகளை ஒரே கூரையின் கீழ் கொண்டுவர முயன்றபோது, நாக்பூரின் பதில் திட்டவட்டமான “ஒப்பந்தம் இல்லை” என்பதாக இருந்தது. ஜனதா கட்சியின் ஜனசங்கப் பிரிவு தனது தனித்த அடையாளத்தையும் ஆர்.எஸ்.எஸ். மீதான தனது விசுவாசத்தையும் ஒருபோதும் கைவிடவில்லை. இது மொரார்ஜி தேசாய் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும் இந்திரா மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும் வழிவகுத்தது.
ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் அமைச்சரவை அலுவலகங்களுக்குள் நுழைந்தவுடன் ஜெயப்பிரகாஷ் நாராயணனை முற்றிலும் தேவையற்றவராகக் கருதினார்கள். தவிர்க்க முடியாத சண்டைகள் தொடங்கியபோது ஜே.பி. பிரிவினைவாதத் தலைவர்களுக்குள் சில புரிதல்களை ஏற்படுத்த முயன்றபோது, பிரதமர் மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அவரைக் கண்டித்தார். ஜே.பி.யின் தார்மீக அதிகாரத்திற்கு இதுதான் நிலை. அந்தத் தீர்க்கதரிசிக்கு நாடில்லை. அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தின் நாயகரான அவர் பேச்சைக் கேட்க ஆளில்லை. RSS Uprising A consequence of the Emergency

ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கமோ, ஜே.பி.யால் கிடைத்த மரியாதையைத் தொடர்ந்து கட்டியெழுப்பி வருகிறது. அதன் முன்னணி அமைப்புகள், குறிப்பாக பாஜக (முன்னாள் ஜனசங்கம்), “ஜெயப்பிரகாஷ் ஜி”யால் வழிநடத்தப்படுவதாகத் தொடர்ந்து பாசாங்கு செய்கின்றன. அவர் எதை ஆதரித்தாரோ அதற்கு முற்றிலும் எதிரான நடைமுறைகளையும் நெறிமுறைகளையும் செயல்படுத்துகின்றன. இந்துத்துவ சக்திகள் தேசிய அரங்கில் அரங்கேற்றும் ஆக்ரோஷமான காட்சிகளைக் கண்டிருந்தால் ஜே.பி. பீதியில் உறைந்திருப்பார். RSS Uprising A consequence of the Emergency
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆபத்தான பாதையில் கால் பதித்ததற்காக இந்திரா காந்திக்கு வரலாறு ஒரு கடுமையான பாடத்தைக் கற்றுக் கொடுத்தது. அந்த இருண்ட நாட்களில் அவர் செய்தவற்றை மக்கள் திரளால் மாற்றியமைக்க முடிந்தது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சாதாரணமானதொரு அரசியல் சக்தியாக நிலைநிறுத்தியதற்காக ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கு வரலாறு மேலும் கடுமையான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கையில், இந்திரா காந்தியின் அத்துமீறல்கள் ஜே.பி. செய்த மிகப்பெரிய பாவத்திற்கு முன்னால் பெரிதாகத் தெரியவில்லை.
அதுவரையிலும் மைய நீரோட்ட அரசியல் அரங்கில் ஓரங்கட்டப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்., அவசரநிலைக்கு எதிரான இயக்கத்தின் மூலம் தேசிய அரங்கில் பெற்ற அங்கீகாரம் அது எழுச்சி பெறுவதற்கு மிக முக்கியமான பங்கை ஆற்றியிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தப் போரில் வென்ற ஒரே அமைப்பு ஆர்.எஸ்.எஸ். மட்டுமே.
ஹரீஷ் காரே, தி ட்ரிப்யூன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்.
நன்றி: தி வயர் இணைய இதழ் RSS Uprising A consequence of the Emergency