டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ரவீந்திரநாத் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து இன்று (ஜூலை 29) அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஜி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதோடு, ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீரமங்கை இராணி வேலுநாச்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை நினைவுப் பரிசாக வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 25ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் திரௌபதி முர்மு. அப்போது அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவரது மகன் குடியரசுத் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து சிறிது நேரம் உரையாடிவிட்டு சென்றுள்ளார். பதவி ஏற்பு நிகழ்ச்சியின் போது ராணி வேலுநாச்சியார் உள்ளிட்டோர் தேச பாதுகாப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றினர் என்று முர்மு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா