கர்நாடகத்தில் நடந்து வரும் சர்வதேச பட விழாவில் பங்கேற்காத ரேஷ்மிகா மந்தனாவுக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.எல்.ஏ கொந்தளித்துள்ளார்.
பெங்களூருவில் 16-வது திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவில் பெரும்பாலான கன்னட நடிகர்கள் பங்கேற்கவில்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார் நடிகை ரேஷ்மிகா மந்தனாவை கடுமையாக சாடியுள்ளார். Rashmika disregarded Kannada- mla
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “கன்னட மொழி படத்தில்தான் ரேஷ்மிகா அறிமுகமானார். கடந்த முறை நாங்கள் அவரை பட விழாவுக்கு அழைத்த போது, ‘எனது வீடு ஹைதராபாத்தில் உள்ளது. எனக்கு கர்நாடகா எங்கே இருக்கிறது என்றே தெரியாது. எனக்கு அங்கு வர நேரம் இல்லை” என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்த முறையும் 4 எம்.எல்.ஏக்கள் ரேஷ்மிகாவை அழைக்க 10 , 12 முறை அவரை தேடி சென்றனர். இருந்தும் அவர் பட விழாவில் பங்கேற்கவில்லை. கன்னட சினிமாவை, கர்நாடகா மாநிலத்தை அவர் அவமதித்துள்ளார். கன்னட சினிமாவில் அறிமுகமாகி, இங்கேயே வளர்ந்தவருக்கு இவ்வளவு ஆணவமா? அவருக்கு பாடம் கற்று கொடுக்க வேண்டாமா?” என்று தெரிவித்தார்.
ரேஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில் பிறந்தவர். கூர்க் பள்ளியில் படித்தவர். பெங்களூருவிலுள்ள எம்.எஸ்.ராமையா கல்லூரியில்தான் படித்துள்ளார். விஷயம் இப்படியிருக்கையில், கர்நாடகா எங்கே இருக்கிறது? என்று கேட்டதாக எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா குற்றம் சாட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.