வைஃபை ஆன் செய்ததும் பாமக செயல் தலைவர் டாக்டர் அன்புமணி மாமல்லபுரத்தில் கொடுத்த பேட்டி வீடியோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“இன்று (ஏப்ரல் 13) மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஆராய்ந்த அன்புமணி பத்திரிகையாளர்களிடம், ‘நீங்க என்ன கேட்கப் போறீங்கனு தெரியும். இது எங்க உள்கட்சி விவகாரம். நாங்க பேசித் தீர்த்துக்குவோம்’ என்று பதிலளித்தார்.

கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பை தைலாபுரம் தோட்டத்தில் நடத்தினார். அப்போது பாமகவின் தலைவராக செயல்பட்டு வரும் டாக்டர் அன்புமணி இனி செயல் தலைவராக இருப்பார். கட்சியின் நிறுவனரான நானே இனி தலைவராகவும் இருப்பேன் என அறிவித்தார்.
இது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் அதிர்வுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியது. தைலாபுரம் தோட்டத்துக்கும் அன்புமணியின் பனையூர் இல்லத்துக்கும் நிர்வாகிகள் சென்று சந்தித்து வந்தனர்.
டாக்டர் ராமதாஸ் அறிவித்து மூன்று பகல்கள் முடிந்த பிறகு, ஏப்ரல் 12ஆம் தேதி இரவு டாக்டர் அன்புமணி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். Ramadoss collects signatures against Anbumani
அதில் தன்னை தலைவர் பதவியில் இருந்து செயல் தலைவராக மாற்றிய டாக்டர் ராமதாஸுக்கு பதில் கொடுத்திருந்தார்.
அதாவது, ‘கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் வகுத்த கொள்கைகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொதுக்குழுவால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அந்த வகையில் 2022 சென்னையில் நடந்த பொதுக்குழுவில் நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். தேர்தல் ஆணையத்திலும் இது அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது’ என்பதை அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது டாக்டர் ராமதாஸ் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் தன்னை தலைவர் பதவியில் இருந்து அகற்ற முடியாது என்றும், அது பொதுக்குழுவில் தான் முடிவு செய்யப்பட வேண்டும் என்றும் அன்புமணி வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். அதே நேரம் மருத்துவர் அய்யாவின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் மரியாதை நிமித்தமான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

அன்புமணியின் இந்த அறிக்கையை பார்த்ததும் டாக்டர் ராமதாஸின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது பொதுக்குழுவால்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன், அதனால் என்னை அகற்ற முடியாது என்ற அன்புமணியின் வாதம் அவரை சூடேற்றி விட்டன.
’நான் ஆரம்பிச்ச கட்சியில எனக்கே பாடம் சொல்லித் தர்றாரா அவரு?’ என்று கோபத்தில் வெடித்திருக்கிறார் ராமதாஸ். Ramadoss collects signatures against Anbumani
இன்று காலை தைலாபுரம் தோட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவசரமாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது அனைவரும் திரண்டு வர வேண்டாம் என சொல்லப்பட்டு,. அந்தந்த மாவட்டத்தில் இருக்கிற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு அவர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இது இன்று முதல் நடக்க தொடங்கி இருக்கிறது.
தோட்டத்துக்கு வரக்கூடிய பொதுக்குழு உறுப்பினர்களிடம் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸின் முடிவை ஏற்றுக் கொள்கிறோம் என எழுதி கையெழுத்து பெறப்படுகிறது.
இதன் மூலம் அன்புமணியின் ரூட்டிலேயே சென்று அதாவது அவசர பொதுக்குழுவை கூட்டி அங்கேயும் அன்புமணியை செயல் தலைவராக நியமிக்கப்பட்ட அறிவிப்புக்கு ஒப்புதல் பெறுவது என்பதுதான் டாக்டர் ராமதாஸின் திட்டம். அதன்படி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் படலம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று தொடங்கி இருக்கிறது.
இதை அறிந்த டாக்டர் அன்புமணி பனையூரில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்..
ஏப்ரல் 11 ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில், ராமதாஸ்- அன்புமணி அடுத்த கட்ட மோதல்! பொதுக்குழுவை கூட்டப் போவது யார்? என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இப்போது தைலாபுரம் தோட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு கையெழுத்து பெறப்படுவதன்மூலம்… பொதுக்குழுவை கூட்ட ராமதாஸ் தயாராகிவிட்டார் என்று தெரிகிறது.
ஜி.கே. மணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வருகிற மே 11ஆம் தேதி சித்திரை முழு நிலவு மாநாடு வரைக்குமாவது ராமதாசுக்கும் அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் அடுத்த கட்டத்தை எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆப்லைன் போனது வாட்ஸப். Ramadoss collects signatures against Anbumani