ஆங்கிலம் அவமானம் அல்ல, அதிகாரம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 20) பதிலளித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூன் 19) பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுவதற்காக வெட்கப்படும் சூழ்நிலை விரைவில் உருவாகும். நமது மொழிகளே உன்னதமானவை. நமக்கு எதற்கு அந்நிய மொழியான ஆங்கிலம்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆங்கிலம் அவமானம் அல்ல, அதிகாரம். ஆங்கிலம் என்பது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி. இந்தியாவில் உள்ள ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க பாஜக – ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. Rahul Gandhi replied Amit Shah
ஏனென்றால் நீங்கள் கேள்வி கேட்பதையும், சமமாக மாறுவதையும் அவர்கள் விரும்பவில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது.
ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும் மற்றும் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றை போற்ற வேண்டும். அதே வேளையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டி போட ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை ஆங்கிலம் வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.