வங்கக் கடலில் உருவாகியுள்ள ’மோன்தா’ புயல் 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையிலிருந்து கிழக்கே 480 கி.மீ. தூரத்தில் தற்போது உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 27) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நேற்று (26-10-2025) காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 23.30 மணி அளவில் “மோன்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு -தென்கிழக்கே சுமார் 480 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 530 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து (அந்தமான் தீவுகள்) மேற்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28-ஆம் தேதி) காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நேற்று (26-10-2025) மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (27-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.
27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேசச்சில் வீககூடும்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-10-2025: வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
29-10-2025 முதல் 02-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் அமுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சென்னைக்கு ரெட் அலர்ட் இல்லை. திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
