தங்கள் படித்த இளைஞர்களின் நலனுக்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்!”
அனைவருக்கும் தடையற்ற கல்வி வேண்டும். இளைஞர்களின் வாழ்வாதாரத்தையும் மரியாதையும் உறுதிப்படுத்த வலியுறுத்தியும் மதுரை மற்றும் கோவையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ‘காக்ரோச்’ பேரணியில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) மற்றும் நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் ஒன்றிணைந்து, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இருந்து தமுக்கம் தமிழன்னை சிலை வரை இந்தப் பேரணியை நடத்தினர். இளைஞர்களின் இந்தப் பேரணியையொட்டி காவல்துறை தரப்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல், கோவையில் கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் ரோடு ஜெயா பேக்கரி அருகில் இருந்து பெரியார் படிப்பகம் வரை இளைஞர்கள் பேரணியாகச் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
காக்ரோச் ஜனதா பார்ட்டி – பின்னணி
முன்னதாக, போலிச் சான்றிதழ் தொடர்பான வழக்கொன்றை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த், வேலையில்லாத இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என விமர்சித்ததாகச் செய்திகள் வெளியாயின. இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஆம் ஆத்மி கட்சியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றி வந்த அபிஜித் என்ற இளைஞர், ‘கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’ (காக்ரோச் ஜனதா பார்ட்டி) என்ற பெயரில் சமூக வலைதளப் பக்கங்களைத் தொடங்கினார்.
அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படாத இந்த அமைப்பில், “வேலையில்லாமல், எப்போதும் ஆன்லைனில் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாகப் பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ‘ஜென் சி’ (Gen Z) இளைஞர்கள் மட்டுமன்றி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களில் பின்தொடரத் தொடங்கினர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த ‘கரப்பான் ஜனதா கட்சி’ பக்கத்தைப் பின்தொடர்ந்து வந்த நிலையில், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் தளம் இப்பக்கத்தை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது தமிழகத்திலும் கரப்பான் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை முன் வைத்து பேரணிகள் நடைபெற துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
