தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை ஜூலை 2-ஆம் தேதிக்குள் முழுமையாக அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 18) உத்தரவிட்டுள்ளது. Madras High Court recommends Charging
மதுரையில் இரண்டு இடங்களில் அதிமுக கொடிக்கம்பங்களை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அனைத்து பொது இடங்கள், தேசிய, மாநில சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, “கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், நிலையான வழிகாட்டு நெறிமுறை தயாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
நீதிபதி இளந்திரையன், “உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முறையான அனுமதி இல்லாமல் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஜூலை 2-ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும்.
பொதுக்கூட்டங்கள் நடத்தும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது. இந்த உத்தரவை மீறி தடுப்புச் சுவரில் கொடிக்கம்பங்கள் நட்டால் ஒவ்வொரு கொடிக்கம்பத்திற்கும் தலா ரூ.1000 அபராதம் வசூலிக்க வேண்டும்.
மேலும், அரசு இடங்களில் நடத்தப்படும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.