ADVERTISEMENT

அரசுப் பள்ளிகளில் ‘ஹை-டெக்’ லேப்: கம்ப்யூட்டர் இருக்கு… சொல்லித்தர ஆள் எங்கே? – முடங்கும் கோடிக்கணக்கான ரூபாய் திட்டம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Lack of instructors in Hi-tech labs of government schools

“ஸ்மார்ட் கிளாஸ், ஹை-டெக் லேப் என்று பள்ளிக்கல்வித் துறை டிஜிட்டல் மயமாகிவிட்டது” என்று மேடைக்கு மேடை அதிகாரிகள் முழங்கினாலும், நிஜ நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Labs), முறையான பயிற்றுநர்கள் இல்லாமல் முடங்கிக் கிடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

மாணவர்களின் கணினி அறிவை வளர்ப்பதற்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்த அரசு, அதைப் பராமரிக்கவும், பாடம் நடத்தவும் ஆட்களை நியமிக்க மறந்துவிட்டதோ என்ற கேள்வி இப்போது கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

என்ன நடக்கிறது பள்ளிகளில்?

தமிழகத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இணைய வசதியுடன் கூடிய ‘ஹை-டெக்’ ஆய்வகங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப 10 முதல் 20 கணினிகள், புரொஜெக்டர்கள் மற்றும் சர்வர் வசதிகள் செய்து தரப்பட்டன.

ADVERTISEMENT

தொடக்கத்தில் மாணவர்கள் ஆர்வமாகச் சென்றனர். ஆனால், தற்போது பல பள்ளிகளில் இந்த ஆய்வகங்கள் பூட்டியே கிடக்கின்றன. காரணம், இந்தக் கணினிகளை இயக்கவும், மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் தனியாக ‘கணினி பயிற்றுநர்கள்’ (Computer Instructors) அல்லது ‘லேப் அசிஸ்டென்ட்’ பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

ஆசிரியர்களின் அவஸ்தை:

ADVERTISEMENT

“எங்களுக்குப் பாடம் நடத்தவே நேரம் போதவில்லை. இதில் கம்ப்யூட்டர் லேப் சாவியை வேறு கையில் கொடுத்துவிடுகிறார்கள். சர்வர் வேலை செய்யவில்லை என்றால் எங்களால் என்ன செய்ய முடியும்? சாஃப்ட்வேர் கோளாறு, மவுஸ் வேலை செய்யவில்லை என்றால் அதைச் சரிசெய்யும் தொழில்நுட்ப அறிவு எங்களுக்குக் கிடையாது” என்று வேதனைப்படுகிறார்கள் பாட ஆசிரியர்கள்.

பல பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், கணிதம் அல்லது அறிவியல் ஆசிரியர்கள்தான் இந்த லேப்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்குப் போதுமான தொழில்நுட்பப் பயிற்சி இல்லாததால், சிறிய பழுது ஏற்பட்டால் கூட மாதக்கணக்கில் கணினிகள் ஓரம் கட்டப்படுகின்றன.

தூசி படியும் கணினிகள்:

‘நான் முதல்வன்’ திட்டம், எமிஸ் (EMIS) பணிகள், ஆன்லைன் தேர்வுகள் என எல்லாவற்றிற்கும் இந்த லேப்கள் தான் முதுகெலும்பு. ஆனால், பயிற்றுநர்கள் இல்லாததால், மாணவர்கள் தாங்களாகவே எதையாவது செய்துவிட்டுச் செல்கிறார்கள் அல்லது லேப் பூட்டப்படுகிறது. பல லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடின்றித் தூசி படிந்து வீணாகி வருகின்றன.

கோரிக்கை என்ன?

லேப் அமைத்தால் மட்டும் போதாது, அதை நிர்வகிக்க ஆள் வேண்டும்.

எனவே, உடனடியாக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நிரந்தரக் கணினிப் பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் வன்பொருள் (Hardware) தெரிந்த தொழில்நுட்ப உதவியாளர்களையாவது நியமிக்க வேண்டும் என்பதே தலைமை ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share