கரூரில் நடிகர் விஜய்யின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரிக்க தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குழு அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹேம மாலினி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குழுவினர் இன்று விமானம் மூலம் கோவை வந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இந்தக் குழுவின் தலைவர் ஹேமமாலினி மற்றும் குழு உறுப்பினர் அனுராக் தாகூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஹேமமாலினி, “கரூர் சம்பவத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க உள்ளோம் எனவும் தெரிவித்தார். கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக விசாரித்த பிறகு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அனுராக் தாகூர், ” கரூரில் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் சந்திக்க உள்ளோம். இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. இந்த படிப்பினைகளை கொண்டு இனிவரும் காலங்களில் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மாதிரியான சூழல் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகளிடமும் பேச உள்ளோம்.பிரச்சனைக்கான வேர் வரை சென்று விசாரிக்க உள்ளோம்.
மிக முக்கியமான பிரச்சினை குறித்து விசாரிக்க நாங்கள் வந்திருக்கிறோம், எந்த அவசரமும் இல்லாமல் அனைவரையும் சந்திக்க உள்ளோம். ஒடிசா, ஹைதராபாத், மகாராஷ்டிரா என பல்வேறு இடங்களில் இருந்தும் எம்பிக்கள் இதன் தீவிரத் தன்மை குறித்து அறிந்து வந்திருக்கிறோம்” என அனுராக் தாகூர் தெரிவித்தார்.
செய்தியாளர்களை சந்திந்த பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிகள் குழுவினர் கார் மூலம் கரூர் சென்றனர். அப்போது அவர்களது கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டது.
சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் பகுதியில் விபத்து ஏற்பட்ட நிலையில் ஹேமமாலினி சென்ற காரின் பின்பகுதியில் லேசாக சேதமடைந்தது. ஹேமமாலினி காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரின் முன் பகுதியும் சேதம் அடைந்தது.
யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் ஹேம மாலினி அதே காரில் கரூர் புறப்பட்டு சென்றார்.