திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனது அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இன்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அன்புமணி ராமதாஸ் விமர்சனம் குறித்த கேள்விக்கு, இதுபோன்ற உணர்ச்சியற்ற சிலர் இருக்கின்ற காலத்தில் நாங்களும் பொது வாழ்க்கையில் இருக்கிறோம். மக்களின் நலன் சார்ந்து வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கிறோம் என்றார்.
கரூர் விவகாரத்தில் உடனடியாக முதலமைச்சர், அமைச்சர்கள் வந்தது குறித்த விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வரின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றோம். அங்கு பார்த்தபோது மார்ச்சுவரி முன் நிற்கும் போது நம் கண் முன்னாடியே என் ஸ்கூல் பசங்க செத்து செத்து தூக்கி கொண்டு வரும் போது எந்த மனிதனாக இருந்தாலும் அப்படிதான் இருக்கும்.
அதைத்தான், நமது முதல்வர், நம்முடைய ஆதரவாளர்கள் இறக்கும் போது பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டார்கள். எல்லோருக்கும் மன வேதனை இருக்கத்தான் செய்யும் என்றார்.
நான் இதேஇடத்தில் இருந்துதான் நான் சொன்னேன். வாங்கப்பா.. என்ஜாய் பண்ணுங்க.. ஹேப்பியா இருங்க.. ஆனா சேதப்படுத்தாதீங்க.. பாதுகாப்பா வீட்டுக்கு போங்க என்றேன்.
மீண்டும் அதையே தான் சொல்கிறேன். அரசு அன்பு கரங்கள் திட்டத்தில் இருந்து அயல் நாட்டிற்கு உங்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் வரை கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தயவுசெய்து அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நீங்கள் எங்களுக்கு தான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவியுங்கள். உயிர் ரொம்ப முக்கியம் என்றார்.
மேலும் டெட் தேர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், டெட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. ஆசிரியர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், யாரும் பயப்பட வேண்டியதில்லை.
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு, “ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. யார் மீது தவறு உள்ளது எனக் கண்டறியப்பட்டால், தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
