தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லையா? உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

Published On:

| By Kavi

Is there no caste discrimination in Tamil Nadu

தமிழகத்தில் படித்தவர்களும் அதிகம் உள்ளனர். சாதிய பாகுபாடுகளும் அதிகம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. Is there no caste discrimination in Tamil Nadu

சிவகங்கை மாவட்டம் கண்டதேவியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கேசவமணி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், “சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் உள்ள சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது சிவகங்கை தேவஸ்தானம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. 

இந்த கோயில் தேரோட்டத்தின் போது யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து சமூக மக்களையும் இணைத்து அவர்களது பங்களிப்புடன் திருவிழா நடைபெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

எனினும் கடந்தாண்டு புதிய தேரோட்டமும் திருவிழாவும் நடைபெற்றது. 

அப்போது அனைத்து சமூக மக்களும் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் முதல் மரியாதை பெறுவதற்காக சில நாட்டார்கள் அவர்கள் சார்ந்த நபர்களை அழைத்துச் சென்று தேரின் வடத்தை பிடித்ததால் பிற சமூக மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் உருவானது. 

இந்த ஆண்டு வரும் ஜூலை 8ஆம் தேதி கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தேரின் வடத்தை பிடித்து இழுப்பதற்கு வசதியாக யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

எனவே கோயில் தேரோட்ட நிகழ்வில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக்கூடாது. அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வில் இன்று (ஜூன் 24) விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி, ” கோயில் நிகழ்வுகளில் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. கண்டதேவி கோயிலை பொறுத்தவரை ஒவ்வொரு சமூகத்துக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சாதிய பாகுபாடு பார்ப்பது கிடையாது” என்று தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் எங்குமே சாதிய பாகுபாடுகள் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியுமா? 

அரசின் நிலைப்பாட்டை அரசியலுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சொல்லலாம். 

நீதிமன்றத்தில் இதுபோன்று சொல்ல முடியாது. தமிழகத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. அதுபோன்று சாதிய பாகுபாடும் உள்ளது” என்று கருத்து தெரிவித்தனர். 

மேலும் தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். Is there no caste discrimination in Tamil Nadu

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share