ஈரான் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டதாக அறிவித்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்தம் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டது இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. Iran Israel US
இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ந் தேதி ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை தாக்கி அழிப்பதாக அறிவித்த இஸ்ரேல், ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகள், பொதுமக்கள் குடியிருப்புகளையும் தாக்கியது. இஸ்ரேலின் இந்த கோரத் தாக்குதலில் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்தனர்.
இஸ்ரேலின் இந்த மூர்க்கமான தாக்குதலுக்கு ஈரான் சரமாரியாக பதிலடி கொடுத்தது. ஈரான் தம் வசம் வைத்திருக்கும் அதிநவீன ஏவுகணைகள் உள்ளிட்டவைகளையும் ஆயிரக்கணக்கான டிரோன்களையும் இடைவிடாமல் இஸ்ரேல் மீது வீசித் தாக்கியது. இவற்றை அமெரிக்கா உதவியுடன் அழித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தாலும், அந்நாட்டின் தலைநகர் டெல் அவிவ் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகளே, பேரழிவின் சாட்சியமாக இருக்கிறது; இஸ்ரேல் வீதிகளில் யுத்தத்துக்கு எதிராக யூதர்கள் கதறி அழும் கண்ணீர் காட்சிகள், ஈரானின் தாக்குதலின் உச்சத்தை காட்டியது.
இஸ்ரேல்- ஈரான் இடையேயான இந்த மோதலில், அமெரிக்காவும் இணைந்து கொண்டது. ஈரான் அணுசக்தி நிலையங்களை வெற்றிகரமாக தாக்கி அழித்துவிட்டோம் என அறிவித்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப். அப்போதும் கூட, அமெரிக்கா தாக்குதலில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை; இதை எல்லாம் எதிர்பார்த்துதான் பாதுகாப்பாகவே இருக்கிறோம் என்றது ஈரான்.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பின்னர் ஈரான் எடுத்த நடவடிக்கை டிரம்ப் எதிர்பாராத ஒன்றாகவும் இருந்திருக்கலாம். மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்துவிட்டது. கத்தாரில் உள்ள அமெரிக்காவின் விமான படை தளத்தைத் தாக்கப் போகிறோம் என முன்கூட்டியே பிரகடனம் செய்தது ஈரான்.
இப்படி அறிவித்தபடியே கத்தாரில் அமெரிக்காவின் விமான படை தளத்தை தாக்கி அழித்தது ஈரான். அத்துடன் நிற்கவில்லையே.. ஈராக், சிரியா என எங்கெல்லாம் அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஈரானின் அதிநவீன ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து தாக்கின. இறங்கி அடிக்கும் ஈரானின் ஆவேசம்தான் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை ‘கிறங்க’ வைத்தது என்பது மிகையல்ல.
அமெரிக்கா ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதால் ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ஈரானோ முன்னரைப் போல இல்லாமல் இஸ்ரேலுக்கு இடைவிடாமல் பதிலடி தர போரின் போக்கு அதிதீவிரமானது. இன்று அதிகாலை வரை இந்த உக்கிரப் போர் நடந்தது. இதுவும் டொனால்ட் டிரம்ப்பை ரொம்பவே பதறவைத்துவிட்டது.
இதனையடுத்தே கத்தார் மூலமாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வழக்கம் போல பெரியண்ணன்தனமாக, இஸ்ரேல்- ஈரான் இடையே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது என அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். அப்போதும் கூட, அப்படி எல்லாம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லையே என ஈரான் அறிவித்தது.
இப்போதும் ஈரான், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்திவிட்டால் பதிலடி ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளமாட்டோம் என அறிவிக்கிறது. இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்திவிட்டால் போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என்கிறது. இஸ்ரேல் இன்னமும் மவுனமாகவே இருக்கிறது.
ஈரான் எனும் நெருப்புடன் விளையாடிப் பார்த்து கையை சுட்டுக் கொண்டதாலேயே டொனால்ட் டிரம்ப் இப்போது தன்னிச்சையாக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு சர்வதேச உலக அரங்கில் பரிதாபத்துக்குரியவராக நிற்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.