திமுக தலைவர் வாய்ப்பளித்தால் போடி தொகுதியில் போட்டியிடுவேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
இந்தநிலையில் தேனியில் இன்று (மார்ச் 25) செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வரும் திமுக நிர்வாகியுமான ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி ஒரு ஆளுமைமிக்க தலைவராக இல்லை. கடந்த 10 தேர்தல்களில் அவர் தோல்வியைத் தழுவினார். எடப்பாடி பழனிசாமி 210 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறுவது ஒரு நாடகம்.
திமுக தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெறும். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐந்து ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.08% ஆக உயர்ந்துள்ளது.
திமுக அரசு அறிவித்த மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் இல்லாத பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகாலமாக எடப்பாடி பழனிசாமியுடன் பயணித்த போது சொல்ல முடியாத அளவுக்குக் கொடுமைகளையும் வேதனைகளையும் அனுபவித்தேன். முரண்டு பிடிக்காமல் எனது முதல்வர் பதவியை கொடுத்தேன். ஆனால் அவர் என்ன செய்தார்.
தென்மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும். முதல்வர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் தான் தேர்தலில் போட்டியிடத் தயார்” என்று கூறினார்.
