ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது எப்படி? ஐகோர்ட்டு கேள்வி!

Published On:

| By Kavi

நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு கொடுத்தது எப்படி என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. How was electricity connection provided to occupied building

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், “நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தேன். 

இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டது. ஆனால் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நன்மங்கலம் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று (ஜூன் 19)விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், ”ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஆக்கிரமிப்புகளுடன் அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுவதையே காட்டுகிறது” என்று தெரிவித்தனர். 

தொடர்ந்து இந்த வழக்கில் நீர்வளத் துறை செயலாளர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரிய தலைவர் ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக நீதிபதிகள் சேர்த்தனர். 

மேலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு எப்படி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.How was electricity connection provided to occupied building

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share