தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலவர் ஸ்டாலினுக்கும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படட்து. இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது.
இன்று (பிப்ரவரி 19) காலை அவை தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்நிலையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., ‘ கோடை நிதியாக ரூ.2000 தருகிறீர்களே… கடந்த 5 ஆண்டுகளில் 5 கோடைக்காலம் வந்ததே அப்போது ஏன் நிதி கொடுக்கவில்லை’ என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப்போம்னு சொன்னீங்களே… அது என்ன ஆச்சு? அதற்கு பதில் சொல்லிவிட்டு, இதையெல்லாம் கேளுங்கள்… நல்லாருக்கும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றம் தமிழ்நாட்டில் 7.51 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் கூற, இதற்கு முதல்வர் ஸ்டாலின், மணிப்பூர் கணக்கை பேசுவோமா… தமிழகத்தில் தான் பெண்கள் பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்று ஒன்றிய அரசின் தரவுகளே சொல்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரங்களும் பெண்களுக்கு பாதுகாப்பின்மையும் அதிகமாக உள்ளன. இதனை ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.
மேலும், நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக – காங்கிரஸ்தான் என நயினார் நாகேந்திரன் விமர்சித்த நிலையில், நீட்டை ரத்து செய்ய ஒன்றிய அரசு முன்வருமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறு இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
