பஹ்ரைனில் 3-வது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்த சென்னை ‘கண்ணகி நகர்’ கார்த்திகா உள்ளிட்டோருக்கு அரசுப் பணி மற்றும் பரிசுத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் பா. ரஞ்சித் கூறியுள்ளதாவது: பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச் சேர்ந்த’ வீர மகள் கார்த்திகாவிற்கு வாழ்த்துகள்.
கண்ணகி நகர் என்றாலே ஒருவித ஒவ்வாமையுடன் பார்க்கும் சிங்காரச் சென்னையில், இன்றைக்கு ‘கண்ணகி நகர்’ என்கிற பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை எனும் அளவிற்கு இந்த வெற்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தகுதிக்கும் திறமைக்கும் எந்த வரையறையோ படிநிலையோ இல்லை என்பதையும் கார்த்திகா மெய்ப்பித்துள்ளார்.
பொதுவாக, இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்குத் தமிழக அரசுப் பரிசுப் பொருட்களையும் அரசுப் பணியையும் வழங்கி கௌரவிப்படுத்திவருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பஹ்ரைனில் வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் இடம்பெற்ற ஹரியானவைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு தலா 3 கோடி ரூபாய் வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. முன்னதாக, சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்த தமிழக அரசு, கபடி போட்டியில் இந்தியாவின் வெற்றிக்காக அயராது உழைத்த கண்ணகி நகர் கார்த்திகாவிற்கும் ஏனைய தமிழக வீராங்கனைகளுக்கும் அரசுப் பணியோடு கூடிய பரிசுத்தொகையை வழங்க முன்வர வேண்டும்.
மேலும், கண்ணகி நகரிலேயே அதிநவீன கட்டமைப்பு வசதி கொண்ட, சிறந்த கபடி மைதானத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கபடி வீரர், வீராங்கனைகளின் உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கார்த்திகாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
கார்த்திகாவுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தும் பாராட்டுகளையும் தெரிவித்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம். Girls அணியில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை. தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!

