தம் மீது கோபம் இருந்தால் மன்னித்துவிடுங்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவரது மகனும் பாமக தலைவருமான டாக்டர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். Forgive Me If You’re Angry” – Anbumani’s Emotional Appeal to Ramadoss!
பாமகவின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று ஜூன் 15 பேசியதாவது:
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகளாகிறது. கட்சியை நம்முடைய இனமானக் காவலர், சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள் (ராமதாஸ்) தொடங்கி நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். மருத்துவர் அய்யாவின் கொள்கை சமூக நீதி. இதற்காக தொடங்கப்பட்ட கட்சி பாமக.
நம்முடைய பயணம் நீண்ட பயணம், கடுமையான பயணம், கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்தோம். நம் கட்சியை தொடங்கிய நோக்கமே, நமக்கும் ஆட்சி அதிகாரம் வர வேண்டும்; நமக்கு ஆட்சி அதிகாரம் வந்தால்தான் தமிழ்நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பதுதான்.
ராமதாஸ் போராட்டங்களால் பலன் இல்லை
அய்யா அவர்கள் கட்சியைத் தொடங்குவதற்கு முன்னதாக, வன்னியர் சங்கத்தைத் தொடங்கினார். வன்னியர் சங்கத்தை வைத்து எத்தனையோ போராட்டங்களை நடத்தினார். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், பஸ் மறியல், ரயில் மறியல், பட்டை நாமம், தூக்கு கயிறு என எத்தனையோ போராட்டங்கள் நடத்தினார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
பாமக தொடங்கப்பட்டது ஏன்?
ஒவ்வொரு முறையும் அப்போதிருந்த ஆட்சியாளர்களை சந்தித்து எங்களுக்கு சமூக நீதி வழங்குங்கள்; எங்களுக்கு என்றால் வன்னியர்களுக்கு மட்டுமல்ல.. பட்டியலின சமுதாயம் உள்ளிட்ட அனைவருக்கும் சமூக நீதி வேண்டும் என்று அய்யா போராடினார். வன்னியர் சங்கம் போதாது என்றுதான் பாமகவை தொடங்கினார் அய்யா.
அய்யா நல்லா இருப்பீங்க..
இன்று தந்தையர் தினம்.மருத்துவர் அய்யா உள்ளிட்ட உலகம் முழுவதும் இருக்கிற அத்தனை தந்தையருக்கும் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன், 100 ஆண்டுகளுக்கு மேல், நல்ல நிம்மதியுடன், நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். அது ஒரு மகனாக என்னுடைய கடமையும் கூட.
என்னை மன்னிச்சுடுங்க..
என் மீது கோபம் இருந்தால் அய்யா அவர்களே! தயவு செய்து என்னை மன்னித்து கொள்ளுங்கள்.. தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிது அல்ல. அதேவேளையில் அய்யா அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் நல்ல மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.
அய்யாவுக்கு சுகர், பிபி இருக்கு..
அய்யா அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் – அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அய்யாவுக்கு சுகர் பிபி இருக்கு.. அதனால்தான் நான் சொல்கிறேன்.. நீங்க நல்லா உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.. டென்ஷன் ஆகாதீங்க.. என்ன என்ன செய்யனும்னு சொல்லுங்க.. ஒரு மகனாக கட்சியின் தலைவராக செஞ்சுட்டுப் போகலாம்..அய்யா அவர்களே! வருத்தப்படாதீங்க.. கவலைப்படாதீங்க.. கோபப்படாதீங்க..
ராமதாஸ் ஒரு தேசியத் தலைவர்
இது நீங்க உருவாக்கிய கட்சி.. உங்களுடைய கனவுகளை நனவாக்குவோம்.. 45 ஆண்டுகால உழைப்பு உங்களுடையது. நீங்கள் தேசியத் தலைவர். கடந்த ஆண்டு பாரதப் பிரதமர் மோடி, ராமதாஸ் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் என்றார். அந்த மதிப்பும் மரியாதையும் எல்லோருக்கும் இருக்கிறது. இவ்வாறு அன்புமணி பேசினார்.