2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திடீரென நள்ளிரவில் தியானம் மேற்கொண்டு சிறப்பு பூஜை செய்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AIADMK Ex Minister Rajendra Balaji Performs Midnight Meditation for Edappadi Palaniswami
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. பாஜக- அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தேர்தலுக்கு முன்னதாக கடைசி நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகக் கூடும்; அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணி அமையும் என்கிற யூகங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதற்காக திடீரென நள்ளிரவில் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஶ்ரீவில்லிப்புத்தூர் சரபேஸ்வர் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சென்ற ராஜேந்திர பாலாஜி, சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ராஜேந்திர பாலாஜியின் இந்த திடீர் பூஜை, தியானம் அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, நேற்று விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவின் பாகச் செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி ஆலோசனை மேற்கொண்டார்.
