இன்றைய சூழலில் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று, தங்கள் குழந்தைகளின் ‘அதீத’ மொபைல் மோகம். ‘மொபைல் பார்த்தா தான் சாப்பிடுவேன்’ என்று நடை பயிலும் வயதில் அடம்பிடிக்கிற குழந்தைகள், மொபைல் உள்ளடக்கத்தின் வளர்ச்சிக்கேற்பத் தங்களை ‘அப்டேட்’ செய்து கொள்கின்றன. ‘எனக்கு கூட இதை எப்படி ஆபரேட் பண்றதுன்னு தெரியாது.. ஆனா..’ என்றவாறே தங்களது மகனையோ, மகளையோ பெருமையாகப் பிறரிடம் பேசுகிறவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆனால், அதே மொபைல்போன் சில இளந்தளிர்களின் வாழ்வை நசுக்குவதையும் செய்திகளின் வாயிலாக அறிய நேரிடுகிறது. இன்னதென்று வரையறுக்க முடியாதவாறு பல வகையில் அது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைச் சிதைத்து வருகிறது. ‘ஷார்ட்ஸ்’ எனும் குறுங்காணொலிகள் கண்டு பொறுமை என்பதையே முற்றிலுமாக இழந்து நிற்பது அதிலொன்று. இப்படி நம் கண்களுக்குப் புலப்படாத பலப்பல பிரச்சனைகளை மனநல நிபுணர்கள் பட்டியலிடும்போது நாம் அரண்டு போக வேண்டியிருக்கிறது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில் சில அடிகளாவது எடுத்து வைக்க வேண்டாமா என்ற ஆதங்கம் மேலிடுகிறது.
கிட்டத்தட்ட அப்படியொரு விஷயத்தையே பேசுகிறது ‘இ வளயம்’ எனும் மலையாளத் திரைப்படம். இன்று இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
இதனை இயக்கியிருப்பவர் ரேவதி எஸ்.வர்மா. இவர் ஜோதிகாவை நாயகியாகக் கொண்டு ஏற்கனவே ‘ஜுன் ஆர்’ எனும் படத்தைத் தமிழில் தந்தவர். 2013ஆம் ஆண்டு ‘மாட் டாட்’ எனும் மலையாளப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஆக்கிய ‘ஆப் கே லியே ஹம்’ எனும் படம் காத்திருப்பில் இருக்கிறது. E Valayam Malayalam Movie
பதின் பருவத்தினர் மொபைல் போனே கதி என்று கிடப்பதையும், அதனால் ஏற்படும் மோசமான பின்விளைவுகளையும் பேசுகிறதாம் இப்படம்.
‘நோமோபோஃபியா’ எனப்படும் மொபைல் போனால் விளையும் பயத்தை, விபரீதத்தைப் பேசுகிற ‘இ வளயம்’ படத்தில் ஆஷ்லி உஷா எனும் சிறுமி நாயகியாக நடித்திருக்கிறார்.
அவரோடு ரஞ்சி பணிக்கர், நந்து, முத்துமணி, ஷாலு ரஹீம், சாண்ட்ரா, ஸ்ரீந்தா உட்படப் பலர் நடித்துள்ளனர். ஜெர்ரி அமல்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறர்.
சமூக மற்றும் கல்வி சார்ந்த விழிப்புணர்வைத் தருவதாக இப்படம் இருப்பதால், ‘இ வளயம்’ படத்திற்குக் கேரள அரசு வரிவிலக்கு அளித்திருக்கிறது. E Valayam Malayalam Movie
இந்தப் படம் தமிழ்நாட்டில் எப்போது ரிலீஸ் என்று தயாரிப்பு தரப்பு சொன்னால் நன்றாக இருக்கும்..!