வரும் சட்டமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு அக்கட்சித் தலைமை பட்டியலை தயார் செய்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஎம்,சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று உறுதியாக தெரிவித்து வருகின்றன.
இந்தசூழலில், மதிமுகவின் 31-ஆவது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலேயே மதிமுக தொடர்ந்து நீடிக்கும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை மதிமுக மீண்டும் பெறுவதற்காக திமுக கூட்டணியில் அதிகமான இடங்களைக் கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. durai vaiko selects 12 assembly constituencies
இந்தநிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக 12 தொகுதிகளை தேர்வு செய்து அதற்கான வேட்பாளர்கள் பட்டியலை துரை வைகோ தயார் செய்துள்ளார். அதோடு, அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களிடம் தேர்தல் வேலைகளை கவனிக்கவும் சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் மதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள்.
இதுதொடர்பாக அவர்களிடம் நாம் விசாரித்தபோது,
“2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் நான்கு தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.

தற்போது மதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருக்கக்கூடிய சின்னப்பா, பூமிநாதன், ரகுராமன், சதன் திருமலைக்குமார் ஆகிய நான்கு பேரில் பூமிநாதனுக்கு மட்டும் தான் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளனது.
மற்ற 11 தொகுதிகளில்,
திருப்பூர் சட்டமன்ற தொகுதியில் நாகராஜ்,
திண்டுக்கல் – செல்வராகவன்,
கடலூர் அல்லது நெய்வேலியில் மதிமுக பொருளாளர் செந்திலதிபன்,
திருச்சி (கிழக்கு) – டாக்டர்.ரொஹையா,
சீர்காழி – வழக்கறிஞர் செந்தில் செல்வன்,
மணப்பாறை – தமிழ் மாணிக்கம்,
தென்காசி – தி.மு.ராஜேந்திரன்,
சிவகாசி – குமரேசன்,
சென்னை வேளச்சேரி – கழக குமார்,
சாத்தூர் – சிப்பிபாறை ரவிச்சந்திரன்,
கோவை வடக்கு – மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் ஆகியோரை நிற்கவைப்பது என தொகுதிகளை தேர்வு செய்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த மல்லை சத்யா, முத்துரத்தினம் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு மறுக்க முடிவெடுத்துள்ளார் துரை வைகோ ” என்கிறார்கள் பொதுக்குழு உறுப்பினர்கள். durai vaiko selects 12 assembly constituencies