தமது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், வயது முதிர்வால் ஒரு குழந்தையைப் போல மாறிவிட்டார்; அவரை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார். PMK Anbumani Ramadoss
சென்னை சோழிங்கநல்லூரில் ஜூன் 28-ந் தேதி நடைபெற்ற, பாட்டாளி சமூக ஊடகப் பேரவை நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது: வயது முதிர்வு காரணமாக ராமதாஸ் ஒரு குழந்தை போல மாறிவிட்டார். அவரை விமர்சனம் செய்ய வேண்டாம்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது ராமதாஸ் அழைத்துதான் பாஜக நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்; விருந்து வைக்கப்பட்டது. ராமதாஸ் சொன்னதால்தான் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்தது. அதிமுகவுடன்தான் கூட்டணி என ராமதாஸ் கூறியிருந்தால் 2024 மக்களவைத் தேர்தலில் பாமக- அதிமுக கூட்டணி அமைந்திருக்கும்.
ராமதாஸுடன் இருக்கும் 3 பேர்தான் அவரை பயன்படுத்துகின்றனர். இதை தெரிந்து கொண்ட பின்னரே பாமகவின் தலைவராக நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ராமதாஸை சுற்றி இருக்கும் 3 பேரும் தீய சக்திகள்.
பாமக கட்சி விதிகளின் படி,
- பொதுக்குழுவை நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்று மட்டும் உள்ளது. ஆனால் நிறுவனர்தான் அதிகாரமிக்கவர் என எழுதப்படவில்லை.
- பொதுக்குழு மற்றும் கட்சியை நடத்த பாமக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது.
என் மனைவி சவுமியா, பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரை பொதுவெளியில் விமர்சனம் செய்கிறார் ராமதாஸ். நான் பேசாமல் இருப்பதால் ராமதாஸ் சொல்கிற கருத்துகள் மேலோங்கி நிற்கின்றன. ராமதாஸ் பேசுவது அனைத்தும் பொய். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.