மேட்டுப்பாளையத்தில் சீட் கிடைக்காததால் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் சமூன வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
அதிமுகவின் கோட்டை என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் உள்ள கோவை வடக்கு தொகுதி மட்டும் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திமுக கூட்டணியில் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, கவுண்டன் பாளையம், சிங்காநல்லூர் ஆகிய 3 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்கிய திமுக, மற்ற தொகுதிகளில் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் தொகுதியில் இந்த முறை பெண் வேட்பாளரான கவிதா கல்யாண சுந்தரத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் சீட் கிடைக்காததால் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முக சுந்தரம் கண்ணீர் விட்டு அழுதார்.
தங்களது நிர்வாகி அழுவதைக் கண்டு கலக்கமடைந்த திமுக தொண்டர்கள் மற்றும் சக நிர்வாகிகள், ஓடிச் சென்று அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டனர். “அழாதீர்கள் அண்ணே, நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதே சமயம், மக்கள் செல்வாக்கு மிக்க சண்முகசுந்தரத்திற்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், தலைமை தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். வேட்பாளர் மாற்றப்படாவிட்டால் சண்முகசுந்தரம் தனித்து வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஒருதரப்பு ஆதரவாளர்கள் பிடிவாதம் காட்டி வருவதால், மேட்டுப்பாளையம் திமுகவில் உட்கட்சி மோதல் பரபரப்பை கிளப்பி உள்ளது
சண்முக சுந்தரம் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டி.ஆர். பாலு வீடு முற்றுகை
அதேசமயம் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கிருத்திகா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் தனக்கே வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் டி.ஆர். பாலு வீட்டை முற்றுகையிட்டார். 3 முறை எம்எல்ஏவாக இருந்த ராஜாவிற்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். அவர்களுடன் டி.ஆர். பாலு பேச்சுவார்த்தை நடத்தினார்.
