வைஃபை ஆன் செய்ததும் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற கண்ணதாசனின் பாடலை பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
பாடலைப் பாடும்போதே புரிந்தது.. அண்ணன் கலாநிதி மாறனுக்கு தம்பி தயாநிதி மாறன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்தான் என்பது.
காலாநிதி- தயாநிதி விவகாரத்தில் என்னதான் நடக்கிறதாம்?
கலாநிதி மாறனுக்கு எதிரான தயாநிதி மாறனின் திடீர் லீகல் நோட்டீஸ், அதில் குறிப்பிட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகள் அனைத்துமே திமுகவின் மூத்த தலைவர்களையும் சக எம்.பி.க்களையுமே கடும் அதிர்ச்சி அடையவைத்துள்ளதாம். தயாநிதி மாறன் இவ்வளவு வேகமாக, காட்டமாக செயல்பட்டிருப்பது முரசொலி மாறன் குடும்பதையுமே ரொம்ப அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். Digital Thinnai Delhi in the background
தயாநிதிக்கு மிக நெருக்கமான நண்பர்களும் கூட, “ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்?” என அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகவே கேட்கின்றனராம்.

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் இவ்வளவு கடுமையான வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் பின்னணி பற்றி தயாநிதியின் நண்பர்கள் வட்டாரங்களில் நாம் கேட்ட போது. ” தயாநிதி கொஞ்ச நாளாகவே மன உளைச்சலில்தான் இருக்கிறார்.
திமுகவிலும் தமக்கு பெரிய மரியாதை இல்லைன்னு நினைக்கிறார். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தாலும் கூட அந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட செயலாளர் அமைச்சர் சேகர்பாபு, தயாநிதியை மதிப்பதே கிடையாதாம்.
பொதுவாக திமுகவில் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதுதான் தயாநிதியின் வேதனையாம். சில நேரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மட்டும் போய் சில உதவிகளை கேட்பார் தயாநிதி. அவ்வளவுதான். இப்படி கட்சியிலும் மரியாதை இல்லை. குடும்பத்திலும் தமக்கு வர வேண்டிய பங்குகள் முறையாகவும் முழுமையாகவும் கிடைக்கவில்லை என்பதால்தான் இப்படி லீகல் நோட்டீஸ் என தடலாடியாக வேற லெவலுக்கு இறங்கிவிட்டார்” என்கின்றனர்.

இந்த பிரச்சனையில் கலைஞரைப் போல முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, “குடும்ப பிரச்சனையை பெரிசாக்க வேண்டாம். நான் பேசுகிறேன்” என தயாநிதியிடம் கூறினாராம். இந்த பேச்சுவார்த்தையின் போது, தயாநிதியிடம் “முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் கூட சொல்கிறேன்” என சமாதானப்படுத்த முதல்வர் ஸ்டாலின் முயற்சித்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினின் முயற்சிகளைத் தொடர்ந்து, தயாநிதி மாறனுக்கு ரூ.2,000 கோடி தர கலாநிதி மாறன் முன்வந்தாராம். ஆனால், தயாநிதி மாறன் இது மிகவும் குறைவான தொகை என ஏற்க மறுத்தாராம்.
அப்போதும் கூட முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, “கலாநிதியிடம் பேசி கூடுதலாக ரூ.500 கோடி தர சொல்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார். இதையும் ஏற்க மறுத்த தயாநிதி மாறன், இப்போது அனைவரையும் மீறி கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கலாநிதி மாறனுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுதான் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்கின்றனர்.
திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலினின் சமாதான முயற்சிகளை மீறி இப்போது கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியதால் அவருக்கு திமுகவில் இனி எதிர்காலம் இல்லை என்றாகிவிட்டது.
இப்படி “திமுகவிலும் எதிர்காலம் இல்லாமல், முதல்வர் ஸ்டாலின் கோபத்துக்கும் உள்ளாகி, குடும்பத்திலும் ஆதரவு இல்லாமல் இருக்கும் தயாநிதி மாறனுக்கு அப்படி யார்தான் பெரிய அளவில் ஆதரவு தருகிறார்கள்?” என்றும் தயாநிதி மாறனுக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் கேட்டோம்.
இதற்கு, “எங்களுக்கும் தெரியலைதான். ஆனால் ‘டெல்லி’யில் இருந்து சிலர் தயாநிதி மாறனை இயக்குவது போல தெரிகிறது” என பூடகமாக சொல்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சித்தும் பிரச்சனை வேண்டாம் என எச்சரித்தும் பிடிகொடுக்காமல் தயாநிதி மாறன் லீகல் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது பங்கு சந்தை விவகாரங்களுக்கான அமைப்பான செபியிடம் போயிருக்கிறது. செபிதான், மேலிட உத்தரவு வந்தால் அமலாக்கத்துறைக்கு ஃபைல்களை அனுப்பி வைக்குமாம்.

தயாநிதி மாறனின் நண்பர்களிடம், “திமுகவில் முக்கியமானவர் தயாநிதி. 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விவகாரங்களை இப்போது இவ்வளவு கடுமையாக கையில் எடுத்திருக்கிறார்.
அதுவும் அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இப்படி நாமே குடும்பத்துக்குள் பிரச்சனை செய்தால், தேர்தலில் திமுகவை இது பாதிக்கும் என அவருக்கு தெரியாதா?” என கேட்டால் “அதுதான் தெரியலையே” என ஆதங்கப்படுகின்றனர்.
சரி.. மதிமுக பொதுக்குழுவில் வைகோ ரொம்பவே ஆவேசப்பட்டுவிட்டாராமே? என்ன நடந்ததாம்?
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என்று தொடர்ந்து பேசிவருகிறார் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ. அவரது பேட்டிக்குப் பின்னரே சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் அக்கட்சியின் தலைவர் ‘ஆடிட்டர்’ அர்ஜூன் ராஜ் தலைமையில் ஜூன் 22-ந் தேதி நடைபெற்றது.
மதிமுகவில் ஏற்கனவே மல்லை சத்யா – துரை வைகோ விவகாரம் பூதாகரமாக வெடித்து வீதிக்கு வந்த காரணத்தினாலோ என்னவோ, இந்த பொதுக்குழுவில், அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ், பொருளாளர் செந்திலபதிபன் மற்றும் பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மட்டுமே பேசினர்.

இந்தப் பொதுக்குழுவின் தொடக்கத்தில் பேசிய அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ், “ராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றதால்தான் பரதனுக்கு பட்டாபிஷேகமே நடந்தது. உண்மையில் பட்டாபிஷேகத்துக்கு உரியவன் ராமன். அன்று ராமன் வனவாசம் செல்லாமல் இருந்தால் ராமனுக்குதான் முடிசூட்டி இருப்பார்கள்” என ராமனை வைகோவாகவும் பரதனை ஸ்டாலினாகவும் உருவகப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக, திமுகவுக்கு எதிரி அதிமுக – பாஜக. எங்களுக்கும் எதிரி அதிமுக- பாஜக. எங்களையும் எதிரியாக நினைத்து புறக்கணித்தால் ‘எதிரிக்கு எதிரிக்கு’ நண்பர்களாவார்கள். எவ்வளவு மோசமான எதிரியாக இருந்தாலும் சூழ்நிலை கருதி நண்பர்களாக்கிக் கொள்ளும் வியூகத்தை வகுத்தவர் மகாபாரத அர்ஜூனன் எனவும் பேசினார் அர்ஜூன் ராஜ்.
‘அதிமுக- பாஜக- மதிமுக’ உறவுக்கு சாத்தியமே என்கிற தொனியில் அர்ஜூன் ராஜ் பேசியதால்தான் ரொம்பவே கொந்தளித்தாராம் வைகோ.
சட்டென நாற்காலியை விட்டு எழுந்த வைகோ, “நாங்க ஒரு கூட்டணியை எவ்வளவு கஷ்டப்பட்டு அமைக்கிறோம் என்பது தெரியாமல் பேசுறீங்க. இங்கே அர்ஜூன் ராஜ் பேசியதில் எனக்கு உடன்பாடு இல்லை. மைக் கிடைச்சுட்டா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? அர்ஜூன் ராஜ் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என ஆவேசப்பட்டிருக்கிறார்.

அர்ஜூன் ராஜ் பற்ற வைத்த நெருப்பை ஊதிப் பெரிதாக்குவது போல அடுத்ததாக மைக் பிடித்த பொருளாளர் செந்திலதிபன், ” நாங்கள் எவனுக்கும் அடிமை இல்லை. குட்ட குட்ட குனிந்து கொண்டிருப்போம் என நினைக்காதீங்க. எங்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருந்தால், எங்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது.
தமிழ்நாடு- புதுச்சேரியில் உள்ள 40 எம்.பிக்களில் துரை வைகோவுக்கு சமமானவன் எவனாவது இருக்கிறானா? எவன் இருக்கிறான்? எவனுமே இல்லையே” என ஒருமையில் விமர்சிக்க, பொதுக்குழுவிலேயே சலசலப்பும் எதிர்ப்பும் எழுந்ததாம்.
இந்த கூட்டம் தொடர்பாக மதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் பேசுகையில், திமுகவால்தான் 29 ஆண்டுகாலம் எம்பியாக இருந்தவர் வைகோ. இந்த நன்றியை மதிமுகவினர் மறந்துவிடக் கூடாது. தற்போதைய அரசியல் சூழலில் திமுகவிடம் இருந்து விலகுவதும் சரியானது அல்ல, இதை புரிந்தும் புரியாமல் சிலர் பேசுகின்றனர் என ஆதங்கப்பட்டனர்.
அதிமுக கூட்டணியில் விஜய்?
விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்லாத நிலையில், “விஜய் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென அழைப்பு விடுத்துள்ளாரே?
நடிகர் விஜய் பிறந்த நாள் ஜூன் 22-ந் தேதி கொண்டாடப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த முறை விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதனால் கடந்த ஆண்டு விஜய் பிறந்த நாளுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த முறை, எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை; இதனால் எடப்பாடி பழனிசாமியும் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இது பற்றி எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நாம் கேட்ட போது, விஜய் பிறந்த நாள் பற்றி ஆலோசனை நடந்ததுதான், அப்போது, ‘ இந்த வருஷம் என்னுடைய பிறந்த நாளுக்கு அவர் வாழ்த்து சொல்லலையே, நாம் ஏன் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லனும்” என கேள்வியை எழுப்பினாராம் எடப்பாடி பழனிசாமி.
அதுமட்டும் இல்லை.. விஜய் பிறந்த நாளுக்கு “அண்ணன் நயினார் நாகேந்திரன் வாழ்த்து சொன்னாக.. அக்கா தமிழிசை வாழ்த்து சொன்னாக” என்ற ரேஞ்சுக்கு பெரிய பட்டியலே இருக்கிறதே..

யார் யார் விஜய்-க்கு வாழ்த்து சொன்னவர்களாம்?
பாஜகவின் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுகவின் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், பாஜகவுடன் நட்பாக இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆகியோர் விஜய்-க்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்.
திமுக கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் தேமுதிகவின் விஜயபிரபாகரனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். திமுக கூட்டணியில் உள்ள பிற கட்சித் தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் போட்ட ட்வீட்டில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக தமக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என சொல்லிவிட்டார்.
இப்படி பதிவிட்டதற்கு காரணமே, தமக்கு வாழ்த்து சொன்னவர்களில் பெரும்பாலானோர் பாஜக, அதன் கூட்டணித் தலைவர்கள்தான் பாஜகவை எதிர்த்து அரசியல் பேசிக் கொண்டு அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவிப்பதை விஜய் விரும்பவில்லையாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு வைண்ட் அப் செய்தது வாட்ஸ் அப்.