மத்திய அரசும் மாநில அரசுகளும் “டீம் இந்தியா” போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமானது என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் 10ஆவது கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே 24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதி ஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து பல்வேறு மாநில முதல்வர்களும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
தொடர்ந்து, இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மத்திய மாநில அரசுகள் டீம் இந்தியாவை போல இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல” என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும் போது தேசமும் வளர்ச்சி அடைந்ததாக மாறும் என்று கூறிய அவர், “ஒவ்வொரு இந்தியரும் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை இலக்காக வைத்து அதை நோக்கியே முன்னேற வேண்டும்.
ஒவ்வொரு மாநிலமும் சுற்றுலா வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். அதாவது உலக தரத்திற்கு இணையாக அனைத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் ஒவ்வொரு மாநிலமும் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது உருவாக்க வேண்டும்.
இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி நாம் பாடுபட வேண்டும்.
சாதாரண குடி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒரு குழுவாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. Central state governments should work as a team