வேளாண் பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) செய்திகள் வெளியானது.
இந்தநிலையில், மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்தநிலையில், நிலத்தடி நீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது. central government denied water charges for farmers
இதுதொடர்பாக மத்திய அரசு இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மத்திய அரசு முன்னோடியாகக் கொண்டு வரும் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டது நீர்வளத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது.
M-CADWM திட்டமானது நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், பயனுள்ள நீர் மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற எந்தவிதமான உத்தரவும் இல்லை. சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் தெளிவாக விளக்கமளித்துவிட்டார்.
மேலும், இந்திய அரசியலமைப்பின் கீழ் ‘விவசாயம்’ மற்றும் ‘நீர்’ இரண்டும் மாநில பிரிவுகளின் கீழ் வருகிறது. நிலத்தடி நீருக்கு கட்டணம் வசூலித்தாலும் மாநில அரசு மட்டுமே அதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது