திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பலியானார். Car crashes in road accident Musiri
திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (54).
அலுவல் ரீதியாக முசிறியில் இருந்து தனது காரில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி இன்று (ஜூன் 19) காலை சென்று கொண்டிருந்தார்.
அந்த காரை துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் இயக்கினார். கடியாக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்துக்கு வழிவிட்டார்.
அப்போது அந்தப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணியில் பொக்லைன் இயந்திரம் ஒன்று ஈடுபட்டிருந்தது.
இந்த பொக்லைன் இயந்திரம் மீது கோட்டாட்சியர் சென்ற கார் அதிவேகமாக மோதியதில் இடதுபுறம் அமர்ந்திருந்த ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுனர் பிரபாகரன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆரமுத தேவசேனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் அறிந்ததும் திருச்சி ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் தொடங்கி பெட்டவாய்த்தலை வரை அதிக விபத்துகள் நடக்கும் பிளாக்ஸ்பாட் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் அதிவேகமாகவோ அல்லது அஜாக்கிரதையாகவோ செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது.
அதேசமயம், சாலை பணிகள் மேற்கொள்ளும் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இன்றைய விபத்துக்கு காரணம் என்று அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். Car crashes in road accident Musiri