தமிழக பாஜக சார்பில் பகல்ஹாம் தாக்குதலை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. BJP Protest against Pahalgam attack
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், பாஜக துணை தலைவர்கள் கராத்தே தியாகராஜன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி, நடிகரும் முன்னாள் எம்.பி-யுமான சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. அதேபோல பகல்ஹாம் தாக்குதலை கண்டித்து பிற மாவட்டங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
அதே வேளையில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதிகள் இருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அண்ணாமலை தலைமையில் சிவகிரியில் நேற்று (மே 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் பகல்ஹாம் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வந்த நிலையில், அண்ணாமலை மட்டும் இரட்டைக் கொலையைக் கண்டித்து தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியது தலைமையின் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன. BJP Protest against Pahalgam attack

இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, “ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி தொகுதிக்குட்பட்ட பகுதியில் தான் இந்தக் கொலை நடந்துள்ளது. நேற்று காலை இந்த கொலையைக் கண்டித்து அதிமுக சார்பில் அப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தொகுதி என்பதால் கண்டிப்பாக நாமும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமையின் ஒப்புதலோடு தான் அண்ணாமலை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்” என்கிறார்கள்.