நடிகர் வடிவேலு ஒரு இடத்திற்கு சென்று நிகழ்ச்சி நடத்தினால் கூட லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். மக்கள் கூட்டத்தை வைத்து தேர்தல் முடிவு இருக்கும் என கூற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று (செப்டம்பர் – 13) சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பிரச்சாரம் துவங்குகின்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு வாழ்த்துக்கள். இப்பொழுதுதான் விஜய்யின் களப்பணிகள் தீவிரமடைகிறது.
விஜய்யின் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலராலும் கேள்வி எழுப்பப்படுகிறது. கணிசமான வாக்குகளை விஜய் பெற முடியும். ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒரு அணி வடிவமாக வலுவாக இருக்கிறது என்றால் அது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான்.
அதிமுக தலைமையில் கூட்டணி இருக்கிறதாக சொல்லப்படுகிறதே தவிர இன்னும் அது வடிவத்தை பெறவில்லை. அதேபோல் விஜய் தனியாக செல்வார் என்று தான் கூறுகிறார்கள். தனியாக ஒரு அணி கட்டுவார் என்ற ஒரு யூகம் இருந்தாலும் அது இன்னும் வடிவம் பெறவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் கூட்டம் கூடுகிறது. ஆனால் நடிகர் வடிவேலு ஒரு இடத்திற்கு சென்று நிகழ்ச்சி நடத்தினால் கூட லட்சக்கணக்கில் மக்கள் திரளலாம். மக்கள் கூட்டத்தை வைத்து தேர்தல் முடிவு இருக்கும் என கூற முடியாது”என தெரிவித்தார்.
