தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில் 7 மலைகள் உள்ளன. இதன் 7-வது மலையில் தான் சுயம்புவாக அமைந்துள்ள லிங்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் பக்தர்கள் மலை ஏறுவார்கள். சித்ரா பவுர்ணமி நாளில் ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறுவார்கள்.
இந்த நிலையில், தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ரூ.5,353.95 கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இதனிடையே வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ.5,353.95 கட்டணம் செலுத்த வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜகவின் செல்வகுமார், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வெள்ளியங்கிரி மலை ஏற அரசு ரூ.5,353.95 கட்டணம் நிர்ணயித்துள்ளது.
தெற்கில் உதித்த கைலாயமாக, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது வெள்ளியங்கிரி மலை, ஆண்டுதோறும் விரதமிருந்து பல லட்சம் மக்கள் பக்தி சிரத்தையுடன் எந்த கட்டணமும் இல்லாமல் ஏறுவது வழக்கம்.
கடும் மழை, யானை நடமாட்டம் காரணமாக ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆபத்தான மலை பாதையை மேம்படுத்த இதுவரை எந்த ஒரு முயற்சியும் எடுக்காத திராவிட மாடல் அரசு அதிரடியாக இப்போது கொள்ளை கட்டணம் விதித்து வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுவரை இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கபட்டு வந்தனர். அப்படிபட்ட பாதையை விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது தமிழக அரசு. என்று கூறியுள்ளார்.
பாஜக மாநில செயலாளர் அ.அஸ்வத்தாமன் அறிக்கையில் ,
“துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ. 5353 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கிவருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மீக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல.
வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு வெள்ளையங்கிரி மலையில் ஏறுவார்கள். இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு ரூ.5,353 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா?
தாணிகண்டி, முல்லாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள் , வெள்ளியங்கிரியில் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா!?
வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி அவர்கள் திட்டம் தீட்டுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது .
சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். அனைவரும் அறிந்ததே . இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும்.
தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் தமிழ் பாட்டி அவ்வையார் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில் ,சீதை வனம் ,பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக மையங்கள் உள்ளன.வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக அபிஷேகம் நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார். வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
ஒரு மிகப்பெரிய ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்துசெய்யவில்லை என்று சொன்னால் பாஜக போராட்டத்தை முன்னெடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஐந்து மாவட்டங்களில் கனமழை… வார்னிங் கொடுத்த வானிலை மையம்!
இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!