தொடர்ந்து இரண்டு எபிசோட்களில் விஜய் டிவியின் டிஆர்பி ஏறியதை விட அதிகமாக பல இஎன்டி(ENT) டாக்டர்கள் பலனடைந்ததாக சில சோஷியல் மீடியா பதிவுகளை பார்க்க முடிந்தது. அந்த அளவிற்கு பார்வையாளர்களின் காதுகளை பதம் பார்த்த பெரும் குழாயடிச் சண்டைகளுக்குப் பிறகு ஓரளவு நிதானமான எபிசோடாக இது அமைந்தது நன்றே. Bigg Boss Season 7 Day 38
வீட்டாருக்கு தொடர்ந்து எண்ணெய் தராத பிக் பாஸ், அதை வைத்து வீட்டின் இறுக்கமான சூழலை மேலும் பற்றவைக்க முயற்சிப்பதை மட்டும் விடவில்லை. அப்படி அவர் பற்ற வைத்தது தான் இன்றைய டாஸ்க். வெளியான நான்கு புரோமோக்களும் அந்த டாஸ்கை பற்றியது தான். ஹவுஸ்மேட்ஸ், ஒருவரைப் பற்றி மற்றொருவர் புறத்தில் பேசிய கமெண்ட்களை திரையில் காண்பித்து அதற்கு எல்லோர் முன்னிலையிலும் விளக்கமளிக்க வேண்டும் என்பதே டாஸ்க்.
இதில் முக்கியமாக வினுஷாவின் உடல் குறித்து நிக்சன் அடித்த ஒரு ஆபாச கமெண்ட் அம்பலமானது. இந்த புரொமோவே இன்றைய எபிசோடின் முக்கிய புள்ளி.
ஆரம்பமே மாயாவின் வன்மத்திலேயே தொடங்கியது. தூங்கிக் கொண்டிருந்த விசித்ரா, அர்ச்சனாவை கூல் சுரேஷிடம் எழுப்பி வேலை வாங்கச் சொன்னார். ‘விடுமா கால் முடியலன்னு படுத்திருக்காங்க. நான் பார்த்துக்குறேன்’ என அமைதியாக மாயாவை சமாளித்தார் கூல் சுரேஷ். பின் மேக்கப் ரூமில் தனது கேப்டன்சி குறித்து அக்ஷாவிடம் பேசும் போது, ‘நல்லா தானா பண்றேன், சும்மா சொல்லுங்க நல்ல தான பண்றேன்’ என வழக்கம் போல் தனது மூளைச் சலவை வேலையை மாயா ஆரம்பிக்க, ‘இல்லங்க நான் யோசிச்சி சொல்றேன்’ என லாவகமாக தப்பித்தார் அக்ஷயா.
‘நான் கேப்டன் ஆனது பூர்ணிமாவுக்கே பிடிக்கல’ என மாயா கூறியது அந்த ’புல்லி கேங்’குக்குள்ளே தொடங்கும் பனிப் போரை லேசாக குறித்தது. பிக் பாஸ் ஃபேன்ஸ் ஸோனின் பரிந்துரைப் படி இன்று ஸ்மால் பாஸ் வீட்டார் கருப்பு உடையிலும், பிக் பாஸ் வீட்டார் வெள்ளை நிற உடையிலும் அமர்ந்திருந்தனர். அதற்கு இடையில் தான் நடுநிலையான கேப்டன் என மாயா மட்டும் இரண்டு நிறத்திலும் கலந்த ஆடையை அணிந்து வந்ததும், அதற்கு அந்த கேங் விசில் அடித்து வரவேற்றதும் ’கிரிஞ்ச்’-சின் உச்சகட்டம்.
அடுத்த ஷாட்டில் கமல்ஹாசன் பிறந்த நாளுக்காக கொடுக்கப்பட்ட ஸ்ட்ராபரி மில்க்ஷேக்கின் மயக்கத்தில் ஆழ்ந்த நித்திரையில் கிடந்தார் ஜோவிகா. ‘கேப்டன், இது என்ன ரிசார்ட்டா ..? எல்லாரும் என்ன கூவத்தூருக்கா வந்துருக்கீங்க’ என்கிற தொனியில் மாயாவை பிக் பாஸ் நக்கல் செய்ய, அனைவரையும் எழுப்பினார் கேப்டன் மாயா. இப்போது மட்டும் ஹவுஸ்மேட்ஸ் தூங்குவது குறித்து கேப்டனுக்கு எந்த வித கவலையும் இல்லை போலும்.
அடுத்ததாக தொடங்கியது பிக் பாஸின் டாஸ்க். ஒவ்வொருத்தர் சொன்ன முத்தான வாக்கியங்களும் திரையில் காண்பிக்கப்பட்டன. அதில் முதலாக காண்பிக்கப்பட்டது தினேஷ் குறித்து ஜோவிகா பேசியது. ‘அவர் ஆம்பள இல்லன்னு ஃபீல் பண்றாரா என்ன?’ இது தான் அந்த வாக்கியம். அதற்கு ஜோவிகா கொடுத்த விளக்கமும் புரிதலும் நிச்சயம் கேள்விக்குள்ளாக்க வேண்டியதே. அடுத்தது ‘ஜோவிகா தனது வாழ்க்கையை நாசம் செய்கிறார்’ என அர்ச்சனா சொன்ன வாக்கியம். அதற்கு சரியாக விளக்கமளித்தார், சொல்லப் போனால் அதற்கு பெரிதாக விளக்கமும் தேவையில்லை என்றே சொல்லலாம்.
இருப்பினும் அவர் அளித்த விளக்கத்திற்கும் தொடர்ந்து கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை ’புல்லி கேங்’. இந்த எபிசோடின் பெரும் அதிர்ச்சியாக இருந்தது, அடுத்ததாக திரையிடப்பட்ட நிக்சன் சொன்ன வாக்கியமும், அதற்கு உள்ளே இருக்கும் பெண்ணியவாதிகளாக தங்களை காட்டிக்கொள்ளும் நபர்களின் ரியாக்ஷனும் தான்.
வினுஷா குறித்து நிக்சன் பேசிய ’அந்த’ ஆபாச கமெண்ட், வெகு நாட்களுக்கு முன்னரே மக்களுக்கு தெரிந்ததே. வெளியே பார்க்கும் மக்களின் ஆவேசங்களை கருத்தில் கொண்டே இந்த டாஸ்க்கும், அதில் இந்த வாக்கியமும் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் அதற்கு நிக்சன், ‘இதை ஃபன்னா தான் சொன்னேன். என்ன யாரும் அப்படி பார்க்காதீங்க, எனக்கு கோபம் வருது. நீங்க தப்பா நினைச்சா சாரி’ எனக் கேட்டதும் அதற்கு எப்போதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பேசும் மாயா மற்றும் குழுவினர் எந்த வித ரியாக்ஷனும் செய்யாமல் இருந்ததும் பெரும் அதிர்ச்சியளித்தது.
சொல்லப்போனால் பார்க்கும் பலருக்கும் கோபம் வந்தது. இதில், தனது உடலைப் பற்றி நன்றாக சொல்லிவிட்டான் என பூர்ணிமாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி வேறு. நிச்சயம் இதுகுறித்தாவது வார இறுதியில் கமல்ஹாசன் பேச வேண்டும். அடுத்த அதிர்ச்சியாக இருந்தது, பிராவோ குறித்து மாயா மற்றும் குழுவினர் கமெண்ட் அடித்த வாக்கியத்திற்கான அவர்களின் விளக்கம் மற்றும் அதற்கு பிராவோவின் ரியாக்ஷன். ‘யோவ் எதாச்சும் பேசுயா’ என ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் சொல்லும் காட்சி நியாபகம் வந்தது.
டாஸ்க் நிறைவடைந்ததும், பிரதீப்புக்கு கமல் தான் ரெட் கார்டு கொடுத்தார் என விஷ்ணுவிடம் விளக்கிக் கொண்டிருந்தார் பூர்ணிமா. கூடவே, அவர் மீது வைக்கப்பட்ட ஒரு குற்றச்சாட்டையும் உண்மைக்கு மாறாக சுட்டிக் காட்டினார். இதற்கான குறும்படங்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது, இது கமல் பார்வைக்கு போகும் வரை எவரேனும் ஷேர் செய்தால் நன்று.
மறுபக்கம் ‘புல்லி கேங்’-யில் இருந்து ஒவ்வொரு ஆளாக விசித்ரா – அர்ச்சனாவுடன் சேர முன்வருகின்றனர். முதலில் அயிஷா வந்து சமாதானம் ஆகிறார். இதற்கு இந்த வார எவிக்ஷன் காரணமாக இருக்கலாம். நிக்ஷன் தனது குற்ற உணர்ச்சியை எப்படி சரிசெய்வதென தெரியாமல் ஏதேதோ சொல்லி நியாப்படுத்துகிறார். அதற்கு ‘புல்லி கேங்’-யின் சப்போர்ட் இருப்பது ஒரு பக்கம். இருப்பினும் அவரும் இருக்கின்ற நேரத்திலே, இருக்கின்ற வேலையிலே விசித்ரா கட்சிக்கு மாறும் நிலையில் தான் உள்ளார் என்பது அவர் விசித்ராவிடம் பேசியபோது தெரியவந்தது.
ஏறத்தாழ இதுவரை நடந்த சம்பவங்களை தொகுத்து பார்க்கையில், இந்த வார இறுதி எபிசோடை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது ’மருதநாயகம்’ படப்பிடிப்பை விட அவருக்கு மிக சவாலானதாக இருக்கும் என்பது திண்ணம். Bigg Boss Season 7 Day 38
-ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் – நாளை வெளியீடு!
தீபாவளி பரிசாக ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்: அரசு மருத்துவர்கள்!