இந்த பிக் பாஸ் சீசனின் முதல் லவ் எபிசோடாக மாறுவார்களா என எதிர்பார்க்கப்பட்ட மணி – ரவீனா தங்களது காதலை உறுதி செய்துள்ளனர்.
இந்த எபிசோடின் ஆரம்பத்திலேயே பிரதீப், ‘ஹேய் ரவீனா நீ என்னமோ மணிய லவ் பண்ற மாதிரி கண்டெண்ட் கொடுக்குறியாமே.., நாளைக்கு விஷ்ணுவ லவ் பண்ற மாதிரி கண்டெண்ட் கொடேன்’ என அவரது பாணியில் கலாய்க்க, கடுப்பான மணி, ‘இனிமே எங்கள பத்தி பேசாதீங்க’ என கடிந்து கொண்டார்.
பிக் பாஸ் ஜெயில் வாரண்ட் அளித்துள்ள வினுஷா, மற்றும் அக்ஷயா தங்களது வாதத்தை முன்வைக்க கன்ஃபசன் ரூமிற்கு அழைக்கப்பட்டனர். அதில் மக்களை எப்படி எண்டர்டெய்ன் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு “நான் சமைச்சேன், பாட்டு பாடுனேன், வேக்கப் டேன்ஸ் ஆடுனேன், ஓபனா எல்லார்கிட்டயும் பேசுனேன்” போன்ற ஒப்பில்லாத வாதத்தை வினுஷா எடுத்து வைக்க, “இதெல்லாம் எல்லாரும் பண்றதுதாம்மா நீ இந்த வீட்ல என்ன பண்ண?” என கணீர் குரலில் பிக் பாஸ் கேட்க, ‘இனி போக போக கத்துக்குறேன்’ என சரண்டர் ஆனார் வினுஷா.
இதில் யார் ஜெயிலுக்கு போகப் போகிறார் என்கிற முடிவை தள்ளி வைப்பதாக பிக் பாஸால் அறிவிக்கப்பட்டது. தனது தினசரி வேலையான கிச்சனை குறை கூறும் வேலையை மீண்டும் ஆரம்பித்தார் விசித்ரா, இம்முறை கொஞ்சம் ‘பூமர்’ தனங்கள் தூக்கலாக, ‘கிச்சன இப்படி வைச்சிருக்கியே, உனக்கெல்லாம் கல்யாணம் ஆயிருச்சாம்மா?’ என கேட்க ‘நாலு தடவ ஆகிருச்சு, இப்ப என்னங்கிற’ என அரட்டினார் மாயா.
இதில் இருந்து தொடங்கியது கிச்சன் கலவரம். தொடர்ந்து அனைவரையும் கடிந்துக் கொண்டிருக்கும் விஷ்ணு இம்முறை யுகேந்திரனை கொஞ்சம் மோசமாகவே கடிந்தார் என்றே கூற வேண்டும். “டம்மி பாவா நீ, சிங்கிங் ஷோக்கு போ’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தியது குறித்து கமல்ஹாசன் நிச்சயம் சுட்டிக்காட்டுவார் என நம்புவோம்.
அத்தனை அவமானங்களுக்கு மத்தியிலும் ‘தேவர் மகன்’ சிவாஜி போல் ‘பஞ்சாயத்துல கொலை விழுகனும்னே இந்தப் பையன் பேசுறான் டா’ என்பது போல் கடந்தார் யுகேந்திரன்.
மொத்த ஸ்மால் பாஸ் வீடும் ஸ்ட்ரைக் செய்யத் தொடங்கினர். நம்ம டாஸ்க் டீம் வேலையெல்லாம் இவங்களே செஞ்சிக்கிறாங்களே டா என ஸ்மால் பாஸும் அதை இன்னும் சிறப்பாக செய்யச் சொல்லி வாழ்த்த, தொடங்கியது பிக் பாஸ் வரலாற்றின் முதல் ஸ்ட்ரைக். மேலும் பிக் பாஸ் வீட்டை வெறுப்பேத்த எழுதி வைத்த டிரால் பாடலையும் பாடினர்.
பிக் பாஸ் வீட்டாருக்கு எந்த ஒரு உணவுப் பொருளையும் கொடுக்காத ஸ்மால் பாஸ் வீட்டார் மத்தியில், ரவீனாவின் பெர்ட் டே கேக்கை மட்டும் பிரதீப் கொடுத்து, ‘அது நம்ம வீட்டோடது இல்ல மச்சான், அதை நேர்மையா கொடுத்துரனும்’ என்றார்.
’இருந்தாலும் உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு’ என சொல்லத் தோன்றியது. ‘பிக் பாஸ் எல்லாரும் பட்னி கிடக்குறாங்க எதாச்சும் பண்ணுங்க’ என கேப்டன் மன்றாட, பிக் பாஸும் இறங்கவில்லை.
கடைசியாக ரூல்ஸ் படி மளிகை பொருட்களை நாம் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்று அத்தனை பொருட்களையும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் எடுக்க, ‘அப்போ இந்தாங்கடா கறியையும் நீங்களே வைச்சிக்கோங்க டா’ என அரை கிலோ கறியை தூக்கி எறிந்தார் பிரதீப். ஆனால், இத்தனை பேர் ஸ்மால் பாஸ் வீட்டில் சமைக்காமல் சாப்பிட்டாலும், பிரதீப் மட்டும் சாப்பிடவில்லை.
இவர புரிஞ்சிக்கவே முடியலைலே? ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த கேப்டன், ‘இப்போ உங்களுக்கு வேலை செய்ய தான டா ஆளு வேணும்? நானே வரேன் டா” எனக் கூறி தன் மக்களைக் காக்க ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் வந்தார் விக்ரம்.
அதற்கு பின்னரே நடந்தேறியது எவரும் எதிர்பாராத சம்பவம். மணி, தான் ரவீனாவை காதலிப்பதாக அயிஷாவிடம் சொல்ல, ‘அவகிட்ட நீங்க எப்படி சொல்லலாம்? இது நம்ம பெர்ஷனல் விஷயம். உங்க வீட்ல பார்க்குற மாதிரி எங்க வீட்ல பார்க்க மாட்டாங்க’ என சொல்ல. ‘அப்போ என்ன நடிக்க சொல்றியா..? இதெல்லாம் கண்டெண்ட்காகவா பண்ணோம்..?’ என மணி கேட்க அவர் காலடியிலேயே ரவீனா அழுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: தமிழ்நாட்டின் கோரிக்கைகள் என்ன?