கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலம் யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்ட அரங்கில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் துவங்கியது. கூட்டம் துவங்கியவுடன் கரூர் தவெக கட்சி நிகழ்ச்சியில் உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் மேயர் ரங்கநாயகியிடம் தெரிவித்த நிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து தமிழகத்தின் மிக நீண்ட பாலமான, அவினாசி சாலை ஜிடி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டதற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், இந்த திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் எழுந்து உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்க என கோஷமிட்ட படியே அதிமுக உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபாகரன், மேயர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கலாம்.103 தீர்மானங்களில் 55 தீர்மான்ங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கையூட்டு நடைபெற்று இருக்க கூடும் எனவே விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.