தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (அக்டோபர் 14) தொடங்கிய நிலையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மறைந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் ச.புரட்சிமணி, சு.குணசேகரன், வீ.சே.கோவிந்தசாமி, ஓ.எஸ். அமர்நாத், ஆ.அறிவழகன், துரை அன்பரசன் என்ற ராமலிங்கம், ம.அ.கலீலுர் ரஹ்மான், இரா. சின்னச்சாமி அகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
இதேபோல் கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேலும் கேரள மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன், மூத்த பாஜக தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ், சட்டமன்ற பேரவை உறுப்பினர் T.K.அமுல் கந்தசாமி ஆகியோருக்குக்கும் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு சில நொடிகள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மறைந்த தலைவா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பேரவையின் நிகழ்வுகள் அனைத்தும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
