”மன்னிப்பு போதாது… கைது செய்யுங்க!” – அரசு ஓட்டுநருக்கு ஆதரவாக அன்புமணி

Published On:

| By christopher

anbumani pushed the govt to arrest the setc manager

கட்டப்பஞ்சாயத்து செய்யவா அரசு? ஓட்டுனரை காலணியால் அடித்த போக்குவரத்துக் கழக மேலாளரை உடனே கைது செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இன்று (ஜூன் 9) தெரிவித்துள்ளார். anbumani pushed the govt to arrest the setc manager

மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஒன்று ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று நின்றது. அதில் செல்வதற்கு காத்திருந்த பயணிகள், பேருந்து நீண்ட நேரமாகியும் எடுக்காததால் விரக்தி அடைந்தனர். இதுகுறித்து கேட்டபோது, ”மேலாளர் கூறினால் மட்டும்தான் அரசு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து இயக்க முடியும்” என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக பணியில் இருந்த உதவி மேலாளர் மாரிமுத்துவிடம் சென்ற பயணிகள் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் விரைவாக பேருந்தை இயக்க கோரிக்கை வைத்தனர். அவர் மறுக்கவே, பயணிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பேருந்து ஓட்டுனர் கணேசனை அதிகாரிகள் கடுமையாக திட்டினர். பின்னர் அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்ற நிலையில் உதவி மேலாளர் மாரிமுத்து திடீர் என்று தனது காலில் இருந்து செருப்பை கழற்றி ஓட்டுனரை கடுமையாக தாக்கினார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடை நீக்கம் செய்து மதுரை போக்குவரத்து இயக்குநர் இளங்கோவன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து செருப்பால் அடித்த உதவி மேலாளர் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும் அவரை பணியிடை நீக்கம் செய்யமால், மன்னிப்பு வீடியோ வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது மன்னிக்க முடியாத குற்றம்!

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், எந்தத் தவறும் செய்யாத அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுனரை அரசுப் போக்குவரத்துக்கழக உதவி மேலாளர் காலணியால் அடித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

அதற்குக் காரணமாக உதவி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசும், காவல்துறையும் அவரை காணொலியில் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டு ஒதுங்கியிருப்பது அதைக் விடக் கொடுமையானது. போக்குவரத்துக்கழகம் மற்றும் காவல்துறையின் இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுனர் எந்தத் தவறும் செய்யவில்லை. மாறாக, பேருந்தை இயக்கும்படி பயணிகள் கோரிய போது, ’உயரதிகாரியான மேலாளர் ஆணையிட்டால் தான் இயக்க முடியும்’ என்று கூறியுள்ளார். இதில் எந்தத் தவறும் இல்லை. இது தொடர்பாக உதவி மேலாளரிடம் பயணிகள் முறையிட்ட போது, பயணிகளை தரக்குறைவாக பேசிய உதவி மேலாளர், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை தாம் அணிந்திருந்த காலணியால் அடித்திருக்கிறார். இது மன்னிக்க முடியாத குற்றம்.

அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து!

ஓட்டுனரை உதவி மேலாளர் காலணியால் தாக்கும் காணொலி வைரலாகி வரும் நிலையில், அதனடிப்படையில் விசாரணை நடத்தி உதவி மேலாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓட்டுனர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக நடந்த நிகழ்வுக்கு மன்னிப்புக் கேட்பதாக உதவி மேலாளரை காணொலி வெளியிடச் செய்திருக்கிறது அரசு. இது அப்பட்டமான கட்டப்பஞ்சாயத்து என்பதைத் தவிர வேறில்லை.

பொதுமக்கள் மத்தியில் ஒருவரை எவரேனும் காலணியால் தாக்கும்பட்சத்தின் அவர் காணொலியில் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்றால், பலரும் முன்கூட்டியே மன்னிப்பு காணொலிகளை பதிவு செய்து வைத்து விட்டு, யாரை வேண்டுமானாலும் காலணியால் தாக்குவார்கள். இப்படி ஒரு சூழலைத் தான் தமிழக அரசு, போக்குவரத்துக் கழகம், காவல்துறை ஆகியவை விரும்புகின்றனவா? என்பதை அரசு விளக்க வேண்டும்.

அரசின் கடமை நிர்வாகம் செய்வது தான், கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஓட்டுனர் தாக்கப்பட்டதற்கு காரணமான உதவி மேலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அன்புமணி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share