ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்கு ஆங்கிலம் அதிகாரம் அளிப்பதால் அம்மொழியை அமித்ஷா எதிர்க்கிறார் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 21) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று அமித்ஷா பேசியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஆங்கிலம் என்பது காலனியத்துவ மொழி அல்ல, அது உலகளாவிய முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகும்.

சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் ஆங்கிலத்தை காலனியத்துவ மொழியாக பார்க்கவில்லை. மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்க ஆங்கிலம் கற்பிக்கின்றனர். வலுவான தேசியப் பெருமையைக் கொண்ட சீனா கூட, வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை அவசியமானதாகக் கருதுகிறது.
ஆனால், இந்தியாவில் அமித்ஷாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆங்கிலத்தை மேல்வகுப்பினருக்கான மொழியாக சித்தரிக்க விரும்புகிறார்கள். ஆங்கிலம் நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அவர்கள் எதிர்க்கவில்லை. மாறாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதால் எதிர்க்கிறார்கள்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் எப்படி இருந்ததோ, அதேபோல் இப்போது ஆங்கிலம் ஏழை மக்களுக்கு எட்டாதவாறு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆங்கில மொழியை கட்டுப்படுத்துகிறார்கள். anbil mahesh condemned amit shah
திமுகவை பொறுத்தவரை தமிழ் மொழி என்பது நமது அடையாளம், ஆங்கிலம் வேலைவாய்ப்புகளுக்கான மொழியாக நாங்கள் நம்புகிறோம்.
அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கிறோம். ஏனென்றால் மொழி ஒரு தடையாக இல்லாமல், ஒரு ஏணியாக இருக்க வேண்டும். அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல, சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது” என்று தெரிவித்துள்ளார். anbil mahesh condemned amit shah